கொரோனாவில் இருந்து மீண்ட நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோயால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கொரோனாவில் இருந்து மீண்ட நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோயால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், கர்நாடகா, மராட்டியம், தெலுங்கானா, மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில், கருப்பு பூஞ்சை பாதிப்பை தொற்று நோயாக அறிவிக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்த்தி உள்ளது.
அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை எழுதி உள்ள கடிதத்தில்,
கருப்பு பூஞ்சை பாதிப்பை தொற்று நோயாக அறிவிக்க வேண்டும். தொற்று நோய்கள் சட்டம் 1897 இன் கீழ் கருப்பு பூஞ்சை பாதிப்பும் தொற்று நோய் தான். அரசு மற்றும் தனியார் மருத்துவ நிறுவனங்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். கருப்பு பூஞ்சை நோயை கண்டறிதல், அதற்கு சிகிச்சை அளிக்க வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து வெளியிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவ நிறுவனங்கள், கருப்பு பூஞ்சை பரவலுக்கான ஐ.சி.எம்.ஆர்ரின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.