பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை,
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு பல்வேறு மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தனிநபர் வாகன பயன்பாடு கணிசமாக குறைந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பெட்ரோல் பயன்பாடும் குறைந்திருக்க வாய்ப்பு உள்ளது.
எனினும், கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பின் படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 17 காசுகளும் டீசல் விலை 29 காசுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நடப்பு மாதத்தில் 12-வது முறையாக பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.93.21-க்கும் டீசல் ரூ.84.07-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. மும்பையில் பெட்ரோல் விலை ரூ.100 ஐ நெருங்கியுள்ளது. அதாவது ஒரு லிட்டர் ரூ.99.49-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. டீசல் ரூ.93.21-க்கு விற்பனையாகிறது. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.94.86-ஆகவும், டீசல் விலை ரூ.88.87-ஆகவும் விற்பனை செய்யப்படுகின்றது. பெங்களூருவில் பெட்ரோல் ரூ.96.31- ஆகவும், டீசல் ரூ.89.12- ஆகவும் விற்பனை செய்யப்படுகின்றது.