மீண்டும் டாடா குழுமம் வசம் செல்கிறது ஏர் இந்தியா?

ஏர் இந்தியா, டாடா குழுமத்துக்கு கைமாறப்பட்டால், இந்த விமான நிறுவனத்தை 67 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கைவசப்படுத்தும் வாய்ப்பு அதற்கு கிடைக்கும்.

Update: 2021-10-01 06:15 GMT
புதுடெல்லி,

மத்திய அரசின் விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவை விற்க அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கிய இந்த விற்பனை நடவடிக்கை கொரோனா தொற்று காரணமாக தாமதமானது.

பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் இந்த பணிகளை முடுக்கி விட்ட மத்திய அரசு, இதற்கான இறுதி ஏல விவரங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தியது. இதற்கு செப்டம்பர் 15-ந் தேதி இறுதி நாளாகவும் அறிவிக்கப்பட்டது.இதில்,  ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்குவதற்கு டாடா குழுமம் விருப்பம் தெரிவித்து ஏல விவரங்களை மத்திய அரசுக்கு சமர்ப்பித்து. 

இந்த நிலையில், ஏர் இந்தியாவை வாங்கும் டாடா குழுமத்தின் ஏல திட்டத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  ஏர் இந்தியாவை வாங்குவதற்காக டாடா குழுமம் அளித்த ஏல திட்டத்தை மத்திய அமைச்சர்கள் குழு  ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஏர் இந்தியா, டாடா குழுமத்துக்கு கைமாறப்பட்டால், இந்த விமான நிறுவனத்தை 67 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கைவசப்படுத்தும் வாய்ப்பு அதற்கு கிடைக்கும். ஏனெனில் டாடா ஏர்லைன்ஸ் என்ற பெயரில் 1932-ம் ஆண்டு டாடா குழுமத்தால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தைதான் மத்திய அரசு கடந்த 1953-ம் ஆண்டு தேசிய மயமாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்