மேற்குவங்காளம்: பாஜக இளைஞரணி துணைத்தலைவர் சுட்டுக்கொலை

மேற்குவங்காளத்தில் மாவட்ட பாஜக இளைஞரணி துணைத்தலைவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2021-10-19 00:11 GMT
கொல்கத்தா,

மேற்குவங்காள மாநிலம் உத்தர் தினஜ்பூர் மாவட்ட பாஜக இளைஞரணி துணைத்தலைவராக செயல்பட்டு வந்தவர் மிதுன் கோஷ். 37 வயதான மிதுன் கோஷ் நேற்றுமுன் தினம் இரவு அவரது வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் இதுவரை ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக போலீசார் தரப்பில் கூறுகையில், மிதுன் கோஷ் இரண்டு பேருடன் தனது வீட்டிற்கு சில துப்பாக்கிகளை கொண்டுவந்துள்ளார். அவர் கொண்டு வந்த ஒரு துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்ததில் மிதுன் கோஷ் உயிரிழந்துள்ளார். 

துப்பாக்கியை யாரிடம் இருந்து வாங்கி வந்தார்? துப்பாக்கியை பரிசோதிக்கும் போது தவறுதலாக குண்டு பாய்ந்து உயிரிழந்தாரா? மிதுன் கோஷ் உடன் வந்த இருவரும் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்றனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.

மேலும் செய்திகள்