கழுத்தை இறுக்கி ஆயுதப்படை போலீஸ்காரர் கொலை; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

உப்பள்ளியில், கழுத்தை இறுக்கி ஆயுதப்படை போலீஸ்காரரை கொன்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2022-06-30 15:46 GMT

உப்பள்ளி;

ஆயுதப்படை போலீஸ்காரர் கொலை

கதக் மாவட்டம் கனவிஓசூரை சேர்ந்தவர் இஸ்மாயில் ஷாப்(வயது 54). இவர், உப்பள்ளி டவுன் ராய்ப்பூர் பகுதியில் ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் உப்பள்ளி அருகே சுத்திகட்டி ரோடு பகுதியில் போலீஸ்காரர் இஸ்மாயில் ஷாப் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், நவநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அதில் இஸ்மாயில் உடலில் ரத்த காயங்கள் எதுவும் இல்லை.

வலைவீச்சு

ஆனால் கழுத்து பகுதியில் கயிற்றினால் இறுக்கிய தடம் இருந்தது. மேலும் அவர் அருகே கயிறு கிடந்தது. அப்போது தான் போலீஸ்காரர் இஸ்மாயில், மர்மநபர்களால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

பின்னர் போலீஸ்காரர் இஸ்மாயில் ஷாப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையிலும் கழுத்தை இறுக்கி போலீஸ்காரர் இஸ்மாயில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

ஆனால் அவரை கொன்ற மர்மநபர்கள் யார், என்ன காரணத்திற்காக கொன்றனர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து நவநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துகொண்டனர். மேலும் மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்