நேஷனல் ஹெரால்டு வழக்கு இன்றைய விசாரணை நிறைவு- சோனியா காந்தி மீண்டும் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை ஜூலை 25ம் தேதி மீண்டும் விசாரணை நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-07-21 10:34 GMT

புதுடெல்லி,

நேஷனல் ஹெரால்டு நாளிதழை வெளியிட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவன சொத்துக்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் எம்.பி. ராகுல்காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் பண மோசடி நடைபெற்றதாக கூறி பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் மத்திய அமலாக்கத்துறை கடந்த மாதம் 8-ம் தேதி ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், சோனியாகாந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என கோரியிருந்தார். இதற்கிடையே, ஜூலை 21-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை இயக்குனரகம் சம்மன் அனுப்பியது. இதை ஏற்று சோனியா காந்தி நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று நேரில் ஆஜரானார். சோனியாகாந்தியுடன், அவரது மகள் பிரியங்கா காந்தியும் அமலாக்கத்துறை அலுவலகம் சென்றார்.

இந்தநிலையில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியிடம் இன்று நடைபெற்ற 3 மணி நேர விசாரணை நிறைவடைந்த நிலையில், மீண்டும் ஜூலை 25ம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்