ஜிதேந்திர அவாத்தின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம்- பா.ஜனதா தலைவர் அறிவிப்பால் சர்ச்சை
மும்பை,
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிதேந்திர அவாத் சமீபத்தில் முகலாய வரலாற்றை அழிக்கும் முயற்சி குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது அவுரங்கசீப் மற்றும் அப்சல் கான் போன்ற எதிரிகளை சந்தித்ததால் தான் சத்ரபதி சிவாஜியின் மகத்துவம் வெளிச்சத்துக்கு வந்தது. முகலாய வரலாற்றை அழிப்பது மராட்டிய மாமன்னர் சிவாஜியின் சாதனைகளை மதிப்பிழக்க செய்யும் என்று தெரிவித்தார். இவரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. பா.ஜனதா கட்சியினர் அவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஜிதேந்திர அவாத்துக்கு எதிரான போராட்டத்தின்போது, பேசிய மாவட்ட பா.ஜனதா தலைவர் கபில் தகேகர், "சத்ரபதி சிவாஜி குறித்து அவதூறாக பேசிய ஜிதேந்திர அவாத்தின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் வெகுமதி வழங்கப்படும்" என அறிவித்தார்.
இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இருப்பினும் மாநில பா.ஜனதா கட்சி அவரின் பேச்சுக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறியுள்ளது. இத்தகைய வன்முறை பேச்சுகளை தங்கள் கட்சி ஒருபோதும் ஆதரிக்காது என பா.ஜனதா செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.