கற்பழிப்பு வழக்கு குற்றவாளிக்கு 10 ஆண்டு கடுங்காவல்- தானே கோர்ட்டு தீர்ப்பு
பாதிக்கப்பட்ட இளம்பெண் பிறழ்சாட்சி அளித்த போதும் கற்பழிப்பு வழக்கு குற்றவாளிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி தானே செசன்ஸ் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.;
தானே,
பாதிக்கப்பட்ட இளம்பெண் பிறழ்சாட்சி அளித்த போதும் கற்பழிப்பு வழக்கு குற்றவாளிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி தானே செசன்ஸ் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
கற்பழிப்பு வழக்கு
தானேயில் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 42 வயது நபர் அவரது உறவினரான 18 வயது இளம்பெண்ணை பலாத்காரம் செய்தார். பெற்றோரை இழந்த இளம்பெண்ணை அவர் தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 42 வயது நபர் மீது கற்பழிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை தானே கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணையின் போது போலீசார் தகுந்த ஆதாரங்களுடன் 42 வயது நபர் மீதான குற்றச்சாட்டுகளை நிருபித்தனர்.
10 ஆண்டு ஜெயில்
இந்தநிலையில் வழக்கு விசாரணையின் போது பாதிக்கப்பட்ட இளம்பெண் திடீரென பிறழ் சாட்சி அளித்து பல்டி அடித்தார். எனினும் வழக்கை விசாரித்த நீதிபதி ராச்னா தெக்ரா குற்றம்சாட்டப்பட்ட இளம்பெண்ணின் உறவினரான 42 வயது நபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறினார்.
நீதிபதி அவரது தீர்ப்பில், "போலீசார் 42 வயது நபர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் வெற்றிகரமாக நிரூபித்து உள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர் தண்டிக்கப்பட்டு, ஜெயிலில் அடைக்கப்பட வேண்டும்" என கூறியுள்ளார்.