சென்னைக்கு அனுப்பியபோது ரூ.23 லட்சம் செல்போன், மடிக்கணினி திருடிய காவலாளிகள் 2 பேர் கைது
சென்னைக்கு அனுப்ப லாரியில் ரெயில் நிலையத்துக்கு எடுத்து சென்றபோது ரூ.23 லட்சம் செல்போன், மடிக்கணினி திருடிய காவலாளிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
மும்பை,
சென்னைக்கு அனுப்ப லாரியில் ரெயில் நிலையத்துக்கு எடுத்து சென்றபோது ரூ.23 லட்சம் செல்போன், மடிக்கணினி திருடிய காவலாளிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரூ.23 லட்சம் செல்போன், மடிக்கணினி திருட்டு
பிவண்டியில் உள்ள அமேசான் குடோனில் இருந்து சென்னைக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரெயில் மூலம் செல்போன், மடிக்கணினி போன்ற பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. பொருட்கள் குடோனில் இருந்து லாரி மூலம் எல்.டி.டி. ரெயில் நிலையத்துக்கு எடுத்து செல்லப்பட்டு, அங்கு இருந்து ரெயில் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சென்னையில் பார்சலை இறக்கிய போது அதில் ரூ.23 லட்சம் மதிப்பிலான செல்போன், மடிக்கணினி மாயமாகி இருந்தது. இதுதொடர்பாக சென்னை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் புகார் குர்லா ரெயில்வே போலீசுக்கு மாற்றப்பட்டது.
காவலாளிகள் கைது
போலீசார் நடத்திய விசாரணையில், பொருட்கள் அமேசான் குடோனில் இருந்து ரெயில் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்ட வழியில் லாரியில் பாதுகாப்பு பணியில் இருந்த மிலிந்த் (35), நரேந்திரா (34) ஆகிய காவலாளிகள் செல்போன், மடிக்கணினியை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் உறவினர், நண்பர்களுக்கு விற்பனை செய்து இருந்த ரூ.14 லட்சம் மதிப்பிலான செல்போன், மடிக்கணினிகளை பறிமுதல் செய்தனர்.