துப்பாக்கி முனையில் லாரி டிரைவரை மிரட்டி வழிப்பறி செய்த சிறுவன் உள்பட 4 பேர் கைது
துப்பாக்கி முனையில் லாரி டிரைவரை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.;
தானே,
துப்பாக்கி முனையில் லாரி டிரைவரை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
வழிப்பறி
மும்பை-நாசிக் நெடுஞ்சாலையில் லாரி ஒன்று கடந்த மாதம் 16-ந் தேதி இரவு சென்று கொண்டிருந்தது. அப்போது நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் துப்பாக்கியை காட்டி லாரியை நிறுத்துமாறு டிரைவரை மிரட்டினர். இதனால் பயந்து போன டிரைவர் லாரியை ஓரமாக நிறுத்தினார்.
இதன்பின் அக்கும்பல் துப்பாக்கி முனையில் மிரட்டி அவரிடம் இருந்த ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம், 3 செல்போன்களை பறித்து கொண்டு தப்பிச்சென்றனர். பாதிக்கப்பட்ட டிரைவர் கல்வா போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் படி போலீசார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
4 பேர் கைது
இந்த சம்பவத்தில் 5 பேர் ஈடுபட்டதும், அவர்களின் அடையாளமும் தெரியவந்தது. இதனால் போலீசார் அவர்களை பிடிக்க நடத்திய விசாரணையில் உத்தரபிரதேச மாநிலத்திற்கு தப்பி சென்றதாக தகவல் கிடைத்தது. இதன்பேரில் தனிப்படை போலீசார் உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்திற்கு சென்றனர். உள்ளூர் போலீசாரின் உதவியுடன் டிரைவரிடம் கொள்ளை அடித்த சிறுவன் உள்பட 4 பேரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய மற்றொருவரை தேடி வருகின்றனர்.
பிடிபட்டவர்களிடம் இருந்து ஏர்கன் துப்பாக்கி மற்றும் ரூ.63 ஆயிரம் ரொக்கம், 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.