மும்பை குடிசைப்பகுதியில் பயங்கர தீ- சிறுவன் பலி
மும்பை குடிசைப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 வயது சிறுவன் பலியானான்.;
மும்பை,
மும்பை குடிசைப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 வயது சிறுவன் பலியானான்.
குடிசைப்பகுதியில் தீ
மும்பை மலாடு கிழக்கு, குரார் ஜாம்ரிஷி நகரில் உள்ள குடிசைப்பகுதியில் நேற்று காலை 11.15 மணியளவில் ஒரு வீட்டில் தீப்பிடித்தது. இந்த தீ வேகமாக அருகில் உள்ள குடிசைகளுக்கும் பரவியது. தீப்பிடித்தவுடன் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே ஓட்டம் பிடித்தனர்.
சிலர் வீட்டில் இருந்த தண்ணீரை கொண்டு தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த பகுதியே புகை மண்டலமானது.
சிறுவன் பலி
தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் 8 தீயணைப்பு வாகனங்கள், 4 பெரிய வாட்டர் டேங்கர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி குடிசைகளில் பிடித்த தீயை அணைத்தனர். மேலும் விபத்தில் காயமடைந்த பிரேம் துக்காராம் போரே என்ற 12 வயது சிறுவனை மீட்டு சதாப்தி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிறுவன் கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர்.
விபத்து குறித்து தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "50-100 குடிசைகளில் தீப்பிடித்து உள்ளது. வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகிவிட்டன. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.