வசாய்,
பால்கர் மாவட்டம் வசாய் கிழக்கு வாலிவ் பகுதியில் திருட்டு செல்போன்களை விற்க ஒருவர் வரவுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று கண்காணித்து வந்தனர். அங்கு வந்த வாலிபரை அடையாளம் கண்டு மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது வாலிபர் தான் வைத்திருந்த கத்தியால் பிடிக்க முயன்ற போலீஸ்காரர் மீது தாக்குதலில் ஈடுபட்டார். இதனை கண்ட மற்ற போலீசார் விரைந்து சென்று வாலிபரை மடக்கி பிடித்தனர். தாக்குதலில் காயமடைந்த போலீஸ்காரரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிடிபட்ட வாலிபர் சாருக் யாசின் சர்தார் (வயது22) என தெரியவந்தது. அவரிடம் இருந்து 9 திருட்டு செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
இவர் மீது வாலிவ், விரார், நாலாச்சோப்ரா பகுதிகளில் திருட்டு சம்பவம் தொடர்பாக 5 வழக்குகள் பதிவாகி இருப்பது தெரியவந்தது.