மும்பை அருகே மின்சார ரெயில் தடம் புரண்டு விபத்து - ரெயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதி.
மும்பை அருகே மின்சார ரெயில் தடம்புரண்ட விபத்தால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.;
மும்பை,
மும்பை அருகே மின்சார ரெயில் தடம்புரண்ட விபத்தால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
தடம் புரண்ட மின்சார ரெயில்
மும்பை அருகே உள்ள தானே மாவட்டம் அம்பர்நாத் ரெயில் நிலையத்துக்கு நேற்று காலை 8.25 மணியளவில் பணிமனையில் இருந்து மின்சார ரெயில் ஒன்று வந்து கொண்டு இருந்தது. பணிமனையில் இருந்து வரும் ரெயில் என்பதால் அதில் பயணிகள் யாரும் இல்லை. ரெயில் நிலையம் அருகே வந்தபோது திடீரென ரெயிலின் கடைசி பெட்டி தடம் புரண்டது. பெட்டியின் ஒரு சக்கரம் மட்டும் தண்டவாளத்தைவிட்டு கீழே இறங்கியது. இதன் காரணமாக அந்த வழித்தடத்தில் வந்த ரெயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன. குறிப்பாக கர்ஜத் நோக்கி சென்ற ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டது.
பயணிகள் அவதி
இதுபற்றி தகவல் அறிந்து ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் மீட்பு வாகனத்துடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் ரெயில் பெட்டியை தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் மீட்பு பணிகள் முடிந்து காலை 10.40 மணிக்கு அந்த வழியாக ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. எல்.டி.டி. - விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் 10.45 மணிக்கு அந்த வழியாக சென்றது. காலை நேரத்தில் மின்சார ரெயில் தடம் புரண்டு ரெயில் சேவை பாதிக்கப்பட்டதால், பயணிகள் கடும் அவதி அடைந்தனர். சமீபத்தில் ஒடிசா மாநிலம் பாலாசோரில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மும்பையில் ரெயில் தடம்புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.