மலாடில் 5 வயது மகனை கழுத்தை அறுத்து கொன்ற தந்தை கைது

மலாடில் 5 வயது மகனை கழுத்தை அறுத்து கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2022-11-21 00:15 IST

மும்பை, 

மலாடில் 5 வயது மகனை கழுத்தை அறுத்து கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளிக்கு சென்ற தாய்

மும்பை மலாடு மால்வானி சர்ச் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் நந்தன் அதிகாரி (வயது44). இவரது மனைவி சுனிதா. மகள் கீத் (13) மகன் லக்சா(5) உள்ளனர். கடந்த 19-ந்தேதி மகள் கீத் தான் பயிலும் பள்ளியில் பெற்றோரை அழைத்து வரும்படி தெரிவித்து இருந்தனர். இதன்படி மகள் கீத் பெற்றோரை அழைத்து உள்ளார். இதற்கு அவளது தந்தை நந்தன் அதிகாரி உறங்கி கொண்டிருந்ததால் செல்லவில்லை. இதனால் மகன் லக்சாவை வீட்டில் விட்டு விட்டு மகள் கீத்தை அழைத்து கொண்டு சுனிதா பள்ளிக்கு சென்றார்.

இதன் பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்த சுனிதா தனது வீட்டின் முன்பு அக்கம்பக்கத்தினர் குவிந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

சிறுவன் கொலை

அங்கு சென்று பார்த்த போது தனது மகன் லக்சா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடப்பதை கண்டு கதறி அழுதார். உடனே அவனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் சிறுவன் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், நந்தன் அதிகாரி தான் தனது மகனை கழுத்தை அறுத்து கொன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் பெற்ற மகனை கொலை செய்ததற்கான காரணம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்