ஆயுள் தண்டனையில் இருந்து டெல்லி பேராசிரியர் விடுவிப்பு
மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்ததாக ஆயுள் தண்டனை பெற்ற வழக்கில் இருந்து டெல்லி முன்னாள் பேராசிரியர் சாய்பாபா விடுவிக்கப்பட்டார்.;
மும்பை,
மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்ததாக ஆயுள் தண்டனை பெற்ற வழக்கில் இருந்து டெல்லி முன்னாள் பேராசிரியர் சாய்பாபா விடுவிக்கப்பட்டார்.
மாற்றுத்திறனாளி பேராசிரியர்
மராட்டிய மாநில போலீசார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்ததாக மாற்றுதிறனாளியான டெல்லி பல்கலைக்கழக ஆங்கில பேராசிரியர் ஜி.என். சாய்பாபாவை கைது செய்தனர். இதேபோல மகேஷ் திரிகி, பாண்டு போரா நரரோதே, ஹேம் கேஷ்வ்தத்தா மிஸ்ரா, பிரசாந்த் ராகி, விஜய் திரிகி ஆகியோரையும் கைது செய்தனர்.
இவர்கள் மீது மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், உள்நாட்டு போரை ஏற்படுத்துதல் மற்றும் உபா சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த கட்சிரோலி செசன்ஸ் கோர்ட்டு 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் பேராசிரியர் ஜி.என். சாய்பாபா உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.
விடுவிப்பு
செசன்ஸ் கோர்ட்டு உத்தரவை எதிர்த்து பேராசிரியர் உள்பட 5 பேரும் மும்பை ஐகோர்ட்டு நாக்பூர் கிளையில் மேல்முறையீடு செய்து இருந்தனர். இதில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில் பாண்டு போரா நரரோதே உயிரிழந்தார்.
இந்தநிலையில் மனு மீதான விசாரணை நீதிபதிகள் ரோகித் தேவ், அனில் பன்சாரே தலைமையிலான அமர்வு முன் நடந்தது. இதில் மனுவை விசாரித்த நீதிபதிகள் மாவோயிஸ்டுகள் தொடர்பான வழக்கில் இருந்து பேராசிரியர் சாய்பாபா உள்பட 5 பேரையும் விடுவித்தனர். மேலும் அவர்களை உடனடியாக ஜெயிலில் இருந்து விடுவிக்கவும் உத்தரவிட்டனர்.