ரூ.2 ஆயிரம் கள்ளநோட்டுகளை வங்கியில் மாற்ற முயன்றவர் கைது

Update:2023-05-29 00:15 IST

மும்பை, 

மும்பை தார்டுதேவ் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் கடந்த 26-ந்தேதி 33 வயதுடைய வாலிபர் ஒருவர், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள ரூ.2 ஆயிரம் 10 நோட்டுகளை மாற்ற அங்கு வந்தார். வங்கியில் புதிதாக திறக்கப்பட்ட கவுண்டரில் பணத்தை செலுத்தி ரூ.500 நோட்டுகளாக மாற்ற முயன்றார். பணத்தை வாங்கிய வங்கி ஊழியருக்கு அவர் கொடுத்தது கள்ளநோட்டுகள் என தெரியவந்தது. இது பற்றி உடனடியாக அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் போலீசார் அங்கு சென்று வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் தானே அருகே உள்ள கவுசா பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். கள்ளநோட்டுகள் தொடர்பாக அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்