அனில் தேஷ்முக் மீதான ஊழல் வழக்கில் முன்னாள் போலீஸ் அதிகாரி அப்ரூவர் - கோர்ட்டு அனுமதி
அனில் தேஷ்முக் மீதான ஊழல் வழக்கில் முன்னாள் போலீஸ் அதிகாரி அப்ரூவர் ஆக மாற கோர்ட்டு அனுமதி அளித்தது.;
மும்பை,
அனில் தேஷ்முக் மீதான ஊழல் வழக்கில் முன்னாள் போலீஸ் அதிகாரி அப்ரூவர் ஆக மாற கோர்ட்டு அனுமதி அளித்தது.
ஊழல் வழக்கு
மராட்டிய உள்துறை மந்திரியாக இருந்தவர் அனில் தேஷ்முக். இவர் பார், ஓட்டல்களில் இருந்து மாதம் ரூ.100 கோடி மாமூல் வசூலிக்க மும்பை போலீசாரை கட்டாயப்படுத்தியதாக அப்போதைய போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் குற்றம் சாட்டினார். வெடிகுண்டு கார் வழக்கில் கைதான முன்னாள் போலீஸ் அதிகாரி சச்சின் வாசே இந்த மாமூல் வசூலில் ஈடுபட்டதாக தெரியவந்தது.
இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் மும்பை ஐகோர்ட்டு உத்தரவுப்படி அனில் தேஷ்முக், முன்னாள் போலீஸ் அதிகாரி சச்சின் வாசே உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதன் காரணமாக அனில் தேஷ்முக் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது. மேலும் கைதான அவர் தற்போது சிறையில் உள்ளார்.
கோர்ட்டு அனுமதி
இந்த நிலையில் அனில்தேஷ்முக் தொடர்பான ஊழல் வழக்கில் அப்ரூவராக மாற முன்னாள் போலீஸ் அதிகாரி சச்சின் வாசே விருப்பம் தெரிவித்தார். மேலும் இதற்கு அனுமதி கோரி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த சிறப்பு கோர்ட்டு சச்சின் வாசேவின் மனுவை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏற்றுக்கொண்டது.