இளம்பெண்ணை கற்பழித்த ரியல் எஸ்டேட் தரகர் கைது
வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணை கடந்த 5 ஆண்டாக கற்பழித்த ரியல் எஸ்டேட் தரகரை போலீசார் கைது செய்தனர்.;
மும்பை,
வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணை கடந்த 5 ஆண்டாக கற்பழித்த ரியல் எஸ்டேட் தரகரை போலீசார் கைது செய்தனர்.
கற்பழிப்பு
மும்பையை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணின் தாயை அவரது தந்தை கடந்த சில ஆண்டுக்கு முன்பு கொலை செய்தார். இதனால் போலீசார் தந்தையை பிடித்து சிறையில் அடைத்தனர். எனவே பெற்றோரின் ஆதரவின்றி இருந்த இளம்பெண், தனது சகோதரனுடன் பாட்டி வீட்டில் தங்கி இருந்தார்.
கடந்த 2017-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தரகரான 46 வயது நபர் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. அவ்வப்போது இளம்பெண்ணிற்கு தேவையான உதவிகளை செய்து வந்தார். சம்பவத்தன்று தரகர் இளம்பெண்ணை வேலைக்கு சேர்த்து விடுவதாக கூறி அந்தேரியில் உள்ள ஓட்டலுக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து இளம்பெண்ணை மிரட்டி கற்பழித்தார். இதே போல வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சுமார் 5 ஆண்டாக இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வந்தார்.
தரகர் கைது
மனஉளைச்சல் அடைந்த இளம்பெண் சம்பவம் குறித்து சகோதரனிடம் தெரிவித்தார். இதன்படி 2 பேரும் முல்லுண்ட் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் தரகர் மீது வழக்கு பதிவு செய்தனர். புகார் பற்றி அறிந்த தரகர் தலைமறைவாகி விட்டார்.
இவரை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தியதில் சத்தாராவில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று தரகரை பிடித்து கைது செய்தனர். மும்பை அழைத்து வந்து மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.