இந்துத்வ அரசு ஆட்சி செய்யும் மக்கள் தாக்கப்படுகின்றனர்- சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு
இஸ்லாமிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்காக இந்துத்வா அரசு ஆட்சி செய்யும் மக்கள் தாக்கப்படுகிறார்கள் என சஞ்சய் ராவத் குற்றம்சாட்டி உள்ளார்.;
மும்பை,
இஸ்லாமிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்காக இந்துத்வா அரசு ஆட்சி செய்யும் மக்கள் தாக்கப்படுகிறார்கள் என சஞ்சய் ராவத் குற்றம்சாட்டி உள்ளார்.
கண்ணீர் புகைக்குண்டு
ரத்னகிரி மாவட்டத்தில் பார்சு பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்க மராட்டிய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த திட்டம் தங்கள் வாழ்வாதாரத்தை பாதிப்பதுடன், இந்த பகுதியில் உள்ள பல்லுயிர் பெருக்கத்தை பாதிக்கும் என கூறி திட்டத்திற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் திட்டத்தை எதிர்ப்பது போராட்டத்திலும் குதித்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜாபூர் தாலுகா பார்சு மற்றும் சோல்கான் கிராமத்தில் சுத்திகரிப்பு ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர். மேலும் போராட்டத்திற்கு ஆதரவாக நின்றன உத்தவ் சிவசேனா எம்.பி. விநாயக் ராவத்தை கைது செய்தனர். கடந்த செவ்வாய் கிழமையும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் உத்தவ் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் நேற்று கூறியதாவது:-
ஒருங்கிணைப்பு இல்லை...
சுத்திகரிப்பு ஆலை திட்டத்தில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லை. ஒருங்கிணைப்பு என்பது சவுதி அரேபியாவை சேர்ந்த இஸ்லாமிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்திற்கும், இந்துத்வவாதி அரசுக்கும் இடையே தான் இருக்கிறது.
ஒரு இஸ்லாமிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்காக, மண்ணின் மைந்தர்களான ரத்னகிரியை சேர்ந்த மராத்தி மக்கள் தாக்கப்படுகின்றனர். இதுதான் அவர்களின் இந்துத்வா.
இவ்வாறு அவர் கூறினார்.