ஷாருக்கானிடம் ரூ.25 கோடி லஞ்சம் கேட்ட வழக்கு: சென்னை அதிகாரி இன்று சி.பி.ஐ. முன் ஆஜராகிறார்

நடிகர் ஷாருக்கானிடம் ரூ.25 கோடி லஞ்சம் கேட்டதாக சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கில் சென்னை ஐ.ஆர்.எஸ். அதிகாரி சமீர் வான்கடே இன்று மும்பையில் சி.பி.ஐ. அதிகாரிகள் முன் ஆஜராகிறார். அவரை வருகிற 22-ந் தேதி வரை கைது செய்ய ஐகோர்ட்டு தடை விதித்தது.;

Update:2023-05-20 00:15 IST

மும்பை, 

நடிகர் ஷாருக்கானிடம் ரூ.25 கோடி லஞ்சம் கேட்டதாக சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கில் சென்னை ஐ.ஆர்.எஸ். அதிகாரி சமீர் வான்கடே இன்று மும்பையில் சி.பி.ஐ. அதிகாரிகள் முன் ஆஜராகிறார். அவரை வருகிற 22-ந் தேதி வரை கைது செய்ய ஐகோர்ட்டு தடை விதித்தது.

ரூ.25 கோடி லஞ்ச பேரம்

மும்பையில் இருந்து கோவா நோக்கி கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி சொகுசு கப்பல் புறப்பட்டு சென்றது. இதில் போதை விருந்து நடைபெற்றதாக கிடைத்த தகவலின் பேரில் மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையை தொடர்ந்து மறுநாள் இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் (வயது 25) உள்ளிட்டவர்கள் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

ஜெயிலில் அடைக்கப்பட்ட ஆர்யன் கான் 3 வாரங்களுக்கு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பின்னர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், ஆர்யன் கான் குற்றமற்றவர் என கூறப்பட்டு இருந்தது.

இதற்கிடையே ஆர்யன் கானை போதைப்பொருள் வழக்கில் இருந்து தப்பிக்க வைக்க நடிகர் ஷாருக்கானிடம் ரூ.25 கோடி லஞ்சம் கேட்டதாகவும், இதில் முதற்கட்டமாக ரூ.50 லட்சம் பெற்றதாகவும் மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குனர் சமீர் வான்கடே உள்ளிட்ட 5 மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு ஆஜராக சமீர் வான்கடேக்கு சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

ஐகோர்ட்டில் மனு

இந்தநிலையில் சமீர் வான்கடே மும்பை ஐகோர்ட்டில் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர், தனக்கு எதிரான சி.பி.ஐ. வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும், சி.பி.ஐ. கைது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க தடைவிதிக்க வேண்டும் எனவும் கோரினார்.

ஆர்யன்கானை கைது செய்ததற்காக பழிவாங்கும் நடவடிக்கையாக தன் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து உள்ளதாகவும் மனுவில் சமீர் வான்கடே கூறினார்.

இன்று ஆஜராகிறார்

மேலும் சி.பி.ஐ. அதிகாரிகள் முன் 20-ந் தேதி (இன்று) காலை 11 மணிஅளவில் மும்பை பி.கே.சி.யில் உள்ள அலுவலகத்தில் ஆஜராக இருப்பதாக சமீர் வான்கடே கூறினார். இதனை பதிவு செய்து கொண்ட ஐகோர்ட்டு நீதிபதிகள், வருகிற 22-ந் தேதி வரை சமீர் வான்கடே மீது கைது நடவடிக்கை எடுக்க தடை விதித்து உத்தரவிட்டனர்.

சமீர் வான்கடே இந்திய வருவாய் பணி (ஐ.ஆர்.எஸ்) அதிகாரி ஆவார். இவர் கடந்த ஆண்டு மே மாதம் மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவில் இருந்து சென்னையில் வரி செலுத்துவோர் சேவைகள் பிரிவின் தலைமை இயக்குனராக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்