தானேயை மும்பையுடன் இணைக்கும் விரிவுப்படுத்தப்பட்ட கோப்ரி மேம்பாலம்- ஷிண்டே திறந்து வைத்தார்
தானேயை மும்பையுடன் இணைக்கும் கோப்ரி மேம்பாலத்தை முதல்-மந்திரி ஷிண்டே வாகன பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அதனுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்.;
தானே,
தானேயை மும்பையுடன் இணைக்கும் கோப்ரி மேம்பாலத்தை முதல்-மந்திரி ஷிண்டே வாகன பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அதனுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்.
விரிவுப்படுத்தப்பட்ட மேம்பாலம்
தானேயை மும்பையுடன் இணைக்கும் வகையில் கோப்ரி ரெயில்வே கிராசிங் மேம்பாலம் உள்ளது. இந்த பாலம் குறுகியதாக இருந்ததால் காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனை தடுக்கும் வகையில் பாலத்தை விரிவுப்படுத்தி புதிதாக வழித்தடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
பாலம் அமைக்கும் பணிகளை மும்பை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொண்டு வந்தது. இதன்படி சுமார் 784 மீட்டர் நீளம் மற்றும் 37.04 அகலத்துக்கு கோப்ரி பாலம் விரிவுபடுத்தப்பட்டது.
ஷிண்டே திறந்து வைத்தார்
விரிவுபடுத்தப்பட்ட கோப்ரி மேம்பாலம் கிழக்கு எக்ஸ்பிரஸ் விரைவு சாலையில் 5 வழித்தடமாகவும், ரெயில்வே கிராசிங் பகுதியில் 4 வழித்தடமாகவும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் திறப்பு விழா நேற்று முதல்-மந்திரி ஷிண்டேவின் பிறந்தநாளையொட்டி நடைபெற்றது. அவர் பாலத்தை வாகன பயன்பாட்டிற்கு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
அதனுடன் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தனது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கேக் வெட்டினார். அவருடன் ஸ்ரீகாந்த் ஷிண்டே எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நிரஞ்சன் தவ்கரே, பிரதாப் சர்நாயக், மும்பை பெருநகர வளர்ச்சி குழும கமிஷனர் சீனிவாசன், கலெக்டர் அசோக் சிங்காரே, போலீஸ் கமிஷனர் ஜெய்ஜித் சிங் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.