பெண் துண்டு, துண்டாக வெட்டி கொலை வழக்கு- 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு

பெண் துண்டு, துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 20 பேரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்தனர். இதுபற்றி பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2023-06-14 19:15 GMT

தானே, 

பெண் துண்டு, துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 20 பேரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்தனர். இதுபற்றி பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

துண்டு, துண்டாக வெட்டிக்கொலை

மும்பையை அடுத்த மிராரோடு கிழக்கு கீதா நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது மாடியில் வசித்து வந்தவர்கள் சரஸ்வதி வைத்யா(வயது36) மற்றும் மனோஜ் சனே(56). சமீபத்தில் இவர்களின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுபற்றி அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார் கொடுத்தனர். இதன்பேரில் போலீசார் விரைந்து வந்து மனோஜ் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் சகிக்க முடியாத துர்நாற்றம் வீசியது. படுக்கையறையில் பிளாஸ்டிக் பை மற்றும் ரத்தமும், சதையும் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் குக்கரில் மனித உடல்பாகங்கள் வைக்கப்பட்டு இருந்தன. விசாரணையில் மனோஜ் சரஸ்வதியின் உடலை துண்டு, துண்டாக வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பரபரப்பான இந்த வழக்கில் மனோஜ் வருகிற 16-ந் தேதி வரை போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டு உள்ளார். இதுபற்றி மிரா-பயந்தர், வசாய்-விரார் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் வழக்கு விசாரணையின் முன்னேற்றம் குறித்து மண்டல துணை போலீஸ் கமிஷனர் ஜெயந்த் பஜ்பாலே கூறியதாவது:-

விஷம் கொடுத்து கொலை

இந்த வழக்கில் இதுவரை 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. சரஸ்வதி மற்றும் அவருக்கு நெருக்கமான உறவினர்களின் டி.என்.ஏ. மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பொருத்திப்பார்க்கும் பணி நடந்து வருகிறது. மேலும் கைதான மனோஜ் மற்றும் பாதிக்கப்பட்ட சரஸ்வதி ஆகியோரின் போன் உரையாடல்கள் மற்றும் தகவல் பறிமாற்றங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சரஸ்வதியை வெட்டுவதற்கு முன்பு மனோஜ் அவருக்கு விஷம் கொடுத்து கொன்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. அவர் போரிவிலி பகுதியில் உள்ள ஒரு கடையில் பூச்சிக்கொல்லி மருந்துகளை வாங்கியது தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

வாக்குமூலம்

கைது செய்யப்பட்ட மனோஜ் தனது வாக்குமூலத்தில், "சரஸ்வதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை அப்புறப்படுத்த மட்டுமே முயன்றேன். நான் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டதால் சரஸ்வதியுடன் உடல் ரீதியாக எந்த உறவும் வைத்து கொள்ளவில்லை" என்று தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்