6 இருமல் மருந்து நிறுவனங்களின் உரிமங்கள் தற்காலிக ரத்து
மராட்டியத்தில் 6 இருமல் மருந்து உற்பத்தி நிறுவனங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.;
மும்பை,
மராட்டியத்தில் 6 இருமல் மருந்து உற்பத்தி நிறுவனங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
நொய்டாவில் 3 பேர் கைது
கடந்த ஆண்டு இந்தியாவின் உத்தர் பிரதேச மாநிலம் நொய்டாவில் மருந்து உற்பத்தி நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தை எடுத்துக்கொண்ட உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த 18 குழந்தைகள் உயிரிழந்ததாக அந்த நாட்டு அரசு குற்றச்சாட்டு வைத்தது. அதையடுத்து மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள் அந்த மருந்து உற்பத்தி நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டு கலப்படம் செய்யப்பட்டதை உறுதி செய்தனர்.
இந்நிலையில், இது தொடர்பாக அந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் 3 பேரை நொய்டா போலீசார் தற்போது கைது செய்தனர். இந்த நிலையில் மராட்டிய உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மந்திரி சஞ்சய் ரத்தோட் சட்டசபையில் கூறியதாவது:-
உரிமம் ரத்து
மராட்டியத்தில் இயங்கி வரும் இருமல் மருந்து உற்பத்தி செய்து வரும் 108 உற்பத்தி நிறுவனங்களில் சுமார் 84 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 6 நிறுவனங்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 4 நிறுவனங்களின் உற்பத்தியை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.
விதிகளை மீறியதற்காக 17 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.