சென்னை பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் 2 புதிய லிப்டுகள் அமைப்பு

சென்னை பேசின் பிரிட்ஜ் ரெயில்நிலையத்தில் 2 புதிய லிப்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Update: 2022-07-02 02:19 GMT


ரெயில் பயணிகளின் பயன்பாட்டிற்காக பல்வேறு வசதிகளை தெற்குரெயில்வே செய்து வருகிறது. அதற்காக ரெயில் நிலையங்களில் லிப்டுகள் மற்றும் தானியங்கி படிக்கட்டுட்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் உதவியோடு பயணிகள் குறிப்பாக முதியவர்கள், கர்ப்பிணிகள் என பலரும் நடைமேடை மற்றும் பொதுத்தளங்களுக்கு சுலபமாக செல்ல இயலும்.

தற்போது சென்னை கோட்டத்தில் 21 ரயில் நிலையங்களில் 40 லிப்டுகளும், 18 நிலையங்களில் 55 தானியங்கி படிக்கட்டுகளும் செயல்பட்டு வருகின்றன. அந்தவகையில் பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்காக 2 புதிய லிப்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. 2-வது மற்றும் 3-வது நடைமேடைகளில் ரூ.80 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட இந்த லிப்டுகள், 13 நபர்களை ஏற்றிச்செல்லும் திறன் கொண்டது.

மேலும், சென்னை எழும்பூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், கொரட்டூர், திருநின்றவூர், குரோம்பேட்டை, பொன்னேரி, வண்ணாரப்பேட்டை மற்றும் ராயபுரம் ஆகிய ரெயில் நிலையங்களில் புதிய லிப்டுகள் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. அதேபோன்று செங்கல்பட்டு மற்றும் அரக்கோணம் ரெயில் நிலையங்களில் புதிதாக 2 தானியங்கி படிக்கட்டுகளை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்