மகள் திருமணத்தில் கருத்துவேறுபாடு: மனைவியை கொன்றுவிட்டு தொழிலாளி தற்கொலை

மகளின் திருமணத்தில் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் மனைவியை கழுத்தை அறுத்து கொடூரமாக கொன்றுவிட்டு, மரத்தில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2018-09-04 22:15 GMT
உசிலம்பட்டி,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கருக்கட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 45). சுமை தூக்கும் தொழிலாளி. அவருடைய மனைவி பிரேமா (42). இவர்களுக்கு தேவி (22) என்ற மகளும், செல்லப்பாண்டி (17) என்ற மகனும் உள்ளனர்.

மகள் தேவிக்கு கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்தில் பாண்டிக்கு விருப்பமில்லை என கூறப்படுகிறது. இருந்தாலும் பிரேமா திருமணத்தை நடத்துவதில் விடாப்பிடியாக இருந்துள்ளார். இதனால் கணவன்- மனைவி இருவருக்கும் மகளின் திருமணம் தொடர்பாக ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் தகராறு இருந்து வந்தது.

நேற்று முன்தினம் இரவிலும் இந்த பிரச்சினை தொடர்பாக அவர்களுக்கு மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவி மீது பாண்டி ஆத்திரம் அடைந்தார். பின்னர் அவர் நமது குடும்ப பிரச்சினையை வீட்டுக்குள் வைத்து பேசவேண்டாம்; தோட்டத்தில் வைத்து பேசிக்கொள்வோம் எனக்கூறி அழைத்துள்ளார். கணவரின் பேச்சை நம்பிய பிரேமா அவருடன் புறப்பட்டுச்சென்றார்.

தோட்டத்திற்கு செல்லும் வழியில் ஒரு இடத்தில், திடீரென்று மனைவியை சரமாரியாக அவர் தாக்கினார். இதில் நிலைகுலைந்த பிரேமாவை, கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் பாண்டி, அந்த பகுதியில் கருவேலமரத்தில் தனது வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிரேமா கொலை செய்யப்பட்டு கிடந்ததையும், பாண்டி தூக்கில் பிணமாக தொங்கியதையும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து அவர்கள் அளித்த தகவலின் பேரில் உசிலம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

மேலும் செய்திகள்