‘மாணவர் சேர்க்கை விரைவில் 100 சதவீதத்தை அடையும்’ எடப்பாடி பழனிசாமி பேச்சு

தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விரைவில் 100 சதவீதத்தை அடையும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2018-09-05 00:00 GMT
சென்னை,

மாணவர்கள் நலன் கருதி பிரதமர் மோடி எழுதிய ‘எக்சாம் வாரியர்’ என்ற புத்தகம் தமிழில் ‘பரீட்சைக்கு பயமேன்’ என்ற தலைப்பில் மொழி பெயர்க்கப்பட்டு, சென்னை கவர்னர் மாளிகையில் நேற்று வெளியிடப்பட்டது.

கவர்னர் பன்வாரிலால் புரோகித் புத்தகத்தை வெளியிட, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- இந்த புத்தகத்துக்குள் பரந்துகிடக்கிற ஆலோசனைகள் அனைத்தும் மிக எளிதாக புரிந்துகொள்ளக்கூடிய அளவில் உள்ளன. மத்திய, மாநில போட்டித்தேர்வுகளை எளிதாக எதிர்கொள்கிற அளவிற்கும், தேர்வை எண்ணி அஞ்சும்படியான மன அழுத்தத்தில் இருந்து விடுபடுகிற அளவிற்கும் உள்ளன. தேர்வுக்காக படிக்காமல் வாழ்க்கைக்காக படிக்கவேண்டும், அதுதான் உண்மையான கல்வி என்கிறார் பிரதமர் மோடி.

மருத்துவ கல்லூரியில் பெற்ற மதிப்பெண்ணைப் பார்த்து ஒரு டாக்டரிடம் மக்கள் சிகிச்சைக்கு செல்வதில்லை. ஒரு வக்கீல் சட்டக்கல்லூரியில் பெற்ற மதிப்பெண்ணைப் பார்த்து பிரச்சினைக்கு தீர்வு காண அவரிடம் போவதில்லை. மதிப்பெண் என்பது வேறு, அறிவு என்பது வேறு. மதிப்பெண் ஒருவருடைய அறிவுக்கான அளவுகோல் அல்ல என்கிறார், பிரதமர்.

குழந்தைகளின் முதல் வழிகாட்டி பெற்றோர்கள்தான். அவர்களின் ஒவ்வொரு வளர்ச்சியையும், பெற்றோர்கள் எப்போதும் உற்று நோக்கிக்கொண்டு இருக்கவேண்டும். கல்வியில் குழந்தைகளின் கனவை நனவாக்க வேண்டிய கடமை ஒவ்வொரு பெற்றோருக்கும் உள்ளது. இப்படிப்பட்ட அரிய கருத்துகள் மிகத் துல்லியமாக இந்த புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் கல்வித்துறைக்கு அதிக அளவாக ரூ.27,206 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மாநிலத்தில், பள்ளிகளில் தொடக்க நிலை வகுப்புகளில் மாணவர் சேர்க்கை சதவீதம் 99.86 ஆகவும், உயர் தொடக்க நிலை வகுப்புகளின் சேர்க்கை சதவீதம் 99.22 ஆகவும் உயர்ந்து உள்ளது. இது விரைவில் 100 சதவீதத்தை அடையும் என்று உறுதி கூறுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசும்போது, ‘மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இந்த புத்தகம் மிகவும் பயனுள்ளது. அனைத்து தரப்பினரும் இதனை வாங்கி பயனடைய வேண்டும்’ என்றார்.

விழாவில் பேசிய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ‘மிகக் கடினம் என்றும், சிரமம் என்றும் மாணவர்கள் கருதுகிற தேர்வுகளை வாழ்வில் நம்மை உயர்த்துகிற ஒரு இனிய அனுபவமாக, மாற்றி விட முடியும் என்பதைத்தான் பிரதமர் மோடி இந்த புத்தகத்தில் தமது அனுபவங்களைக் கலந்து அழகுடன் எடுத்துக் கூறி உள்ளார். தேர்வு எழுத இருக்கும் மாணவர்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும். அவர்களை எவ்வளவு இதமாக கையாளவேண்டும் என்பதற்கு பிரதமர், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் எழுதியுள்ள கடிதங்கள் பொன்போல போற்றி நாம் அனைவரும் பின்பற்றத் தக்கவையாக அமைந்திருக்கின்றன’ என்று பாராட்டினார்.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், “மாணவர்கள் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்வதற்காக பிரதமர் மோடியின் சிந்தனையில் உதித்த கருத்துகள் மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்காக புத்தகமாக தொகுக்கப்பட்டு உள்ளது. இந்த புத்தகம் மாணவர்கள் சமுதாயத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்பதால் இதனை பாடத்திட்டத்தில் கொண்டுவர தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

முன்னதாக கவர்னரின் கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜகோபால் வரவேற்றார். விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ‘வாருங்கள் நாம் அனைவரும் வெற்றி பெறுவோம்’ என்ற தலைப்பில் குறும்படமும் விழாவில் திரையிடப்பட்டது.

மேலும் செய்திகள்