ஆசிரியர் தினத்தையொட்டி சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஆசிரியர்களுக்கு விருது

ஆசிரியர் தினத்தையொட்டி, சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஆசிரியர்களுக்கு ஆர்.சரத்குமார் விருதுகளை வழங்கினார்.

Update: 2018-09-05 23:52 GMT
சென்னை,

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில், சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. விழாவுக்கு கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் தலைமை தாங்கினார்.

விழாவையொட்டி, மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன், வ.உ.சிதம்பரனார் ஆகியோரது உருவப்படங்களுக்கு ஆர்.சரத்குமார் மற்றும் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் எம்.ஏ.சேவியர், மாநில பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன், தலைமை நிலையச் செயலாளர் எம்.பாகீரதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

விழாவில் ஆசிரியர் பணியில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டன. அதன்படி ஆர்.சரத்குமாரின் தந்தை மு.ராமநாதன் விருது தமிழ்நாடு ஆசிரியர் சங்கத் தலைவர் பி.கே.இளமாறனுக்கும், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது தலைமை ஆசிரியர் எம்.எபினேசர் அமலோர்பவராஜிக்கும், காமராஜர் விருது ஆசிரியை எஸ்.ஆரோக்கியமேரிக்கும், வ.உ.சிதம்பரனார் விருது ஆசிரியர் தனிஸ்லாசுக்கும் வழங்கப்பட்டது. விருதுகளை ஆர்.சரத்குமார் வழங்கி கவுரவித்தார்.

அதைத் தொடர்ந்து ஆர்.சரத்குமார் நிருபர்களிடம் கூறும்போது, “இன்று முதல் ஆசிரியர் தினத்தன்று எனது தந்தையின் பெயரிலும்(மு.ராமநாதன்), டாக்டர் ராதாகிருஷ்ணன், காமராஜர், வ.உ.சிதம்பரனார் பெயரிலும் தொடர்ந்து விருதுகள் வழங்கப்படும்” என்றார். 

மேலும் செய்திகள்