‘நாட்டின் வளர்ச்சியில் சிவில் சர்வீஸ் அதிகாரிகளின் பங்கு முக்கியமானது’ என கூறினார் பிரணாப் முகர்ஜி

‘நாட்டின் வளர்ச்சியில் சிவில் சர்வீஸ் அதிகாரிகளின் பங்கு முக்கியமானது’ என பிரணாப் முகர்ஜி கூறினார்.

Update: 2018-09-06 22:00 GMT
சென்னை,

சென்னை அண்ணாநகரில் உள்ள கிங் மேக்கர்ஸ் ஐ.எ.எஸ். அகாடமியின் புதிய பயிற்சி வளாகம் திறப்பு விழா மற்றும் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்தது. அகாடமியின் கவுரவ ஆலோசகர் எம்.பூமிநாதன் முன்னிலை வகித்தார்.

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து காணொலி காட்சி மூலம் அகாடமியின் புதிய பயிற்சி வளாகத்தை அவர் திறந்து வைத்தார்.

பின்னர் அகாடமியில் பயின்று சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்ற 20 சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி பிரணாப் முகர்ஜி பேசியதாவது:-

சிவில் சர்வீஸ் தேர்வுகளில் முன்பு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பிள்ளைகள் தான் வெற்றி பெற முடியும். ஆனால் தற்போது அந்த காலம் மாறிவிட்டது. இப்போது சாதாரண குடும்பத்தில் உள்ளவர்களும் வெற்றி பெறுகின்றனர். கிங் மேக்கர்ஸ் அகாடமி கிராமப்புற மாணவர்களை தேர்வு செய்து பயிற்சி அளித்து தேர்வு தயார்படுத்துவது பாராட்டுக்குரியது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தற்போது உள்ள சிவில் சர்வீஸ் தேர்வை, ஐ.சி.எஸ். தேர்வு என்றனர். இதை எழுத இந்தியர்கள் அனுமதிக்கப்படவில்லை. பெரிய போராட்டங்களால் 1858-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியர்களும் அனுமதிக்கப்பட்டனர். அதற்கு பிறகு பல முக்கிய பதவிகளை இந்தியர்கள் பெற்றனர்.

நாட்டின் வளர்ச்சியில் சிவில் சர்வீஸ் அதிகாரிகளின் பங்கு முக்கியமானது. நான் மத்திய மந்திரியாக பல்வேறு துறைகளில் பணியாற்றிய போது எந்த அதிகாரிகளுடனும் கருத்து மோதல்கள் ஏற்படவில்லை. உலக அளவில் இந்தியா சார்பில் பிரதிநிதிகளாக கலந்து கொள்ளும் வாய்ப்பும் சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கு கிடைக்கிறது.

நீதி, நேர்மையை நிலைநாட்டுவதற்கு பல திட்டங்களை அதிகாரிகள் கொண்டு வரவேண்டும். வெளிநாட்டு கொள்கைகளை வகுப்பது, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டும் பெரிய பொறுப்பும், கடமையும் உங்களுக்கு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேசுகையில், தெளிவான லட்சியம், சரியான தேர்வு, கடின உழைப்பு இருந்தால் யார் வேண்டுமானாலும் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதி வெற்றி பெற முடியும். முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனை தரும் என்பதற்கு இலக்கணமாக முயற்சி செய்து வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

முன்னதாக அகாடமியின் நிர்வாக இயக்குனர் சத்யஸ்ரீ பூமிநாதன் வரவேற்றார். முடிவில் அகாடமி இயக்குனர் வெங்கடேஷ் நாராயணன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்