சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா? அதிகாரிகள் பதில்

சோழவரம் ஏரி முற்றிலும் வறண்டது. எனினும் இதனால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2018-09-06 22:00 GMT
சென்னை,

தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் மாநிலம் முழுவதும் உள்ள நீர் நிலைகளில் முழுமையாக தண்ணீர் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

தற்போது சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக பூண்டி, சோழவரம், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் இருந்து தண்ணீர் பெறப்பட்டு வருகிறது. ஆயிரத்து 81 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் தற்போது வெறும் 1 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது.

கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே சோழவரம் ஏரி வறண்டதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடுமோ என்கிற அச்சத்தில் மக்கள் உள்ளனர். இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் கடந்த மாதங்களில் ஏரிகளில் போதிய தண்ணீர் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது சோழவரம் ஏரி முற்றிலுமாக வறண்டு விட்டதால், சோழவரத்தில் இருந்து ராட்சதக் குழாய்கள் மூலம் புழல் ஏரிக்கு குடிநீர் அனுப்பும் பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டன. சோழவரம் ஏரியில் ஆங்காங்கே குட்டை போல் தேங்கிய தண்ணீரைக் கொண்டு சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியுமா என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

சோழவரம் ஏரியானது கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2005-ம் ஆண்டு முற்றிலுமாக வறண்டது. கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் கீழ் ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் திறக்கப்பட்டால் அல்லது ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்தால் மட்டுமே சோழவரம் ஏரியில் தண்ணீரை நிரப்ப முடியும்.

இருந்த போதிலும் பூண்டி ஏரியில் 13 மில்லியன் கன அடி, புழல் ஏரியில் 673 மில்லியன் கன அடி, செம்பரம்பாக்கத்தில் 423 மில்லியன் கன அடி என 1.1 டி.எம்.சி. தண்ணீர் கையிருப்பில் உள்ளது.

இதுதவிர வீராணம் ஏரியில் இருந்து தினசரி 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்