பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடக்கும் பாரத் பந்திற்கு திமுக ஆதரவு: மு.க ஸ்டாலின்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடக்கும் பாரத் பந்திற்கு திமுக ஆதரவு அளிக்கும் என்று மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-07 05:51 GMT
சென்னை,

பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் மாற்றி அமைக்கும் வழக்கம், கடந்த ஆண்டில் இருந்து அமலில் இருந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை சில சமயங்களில் குறைக்கப்பட்ட போதிலும், பெரும்பாலான நாட்களில் விலை உயர்த்தப்பட்டே வருகிறது.ஒரே நாளில், 24 காசுவரை கூட அதிகரிப்பதால், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு   51 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.83.13 ஆகவும், டீசல் விலை 56 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.76.17 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை உயர்வால், பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்துள்ளனர். இதை காரணமாக வைத்து, அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. ஆட்டோ கட்டணமும் அதிகரித்துள்ளது.பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைத்தால், விலை குறைய வாய்ப்புள்ளது. ஆனால், உற்பத்தி வரியை குறைக்க முடியாது என்று மத்திய அரசு கூறிவிட்டது.

இந்நிலையில், அதிகரித்துக்கொண்டே செல்லும் பெட்ரோலிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சி, 10-ந்தேதி, நாடுதழுவிய முழு அடைப்பு (பாரத் பந்த்) போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு  திமுக ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், பந்த் வெற்றியடைய திமுக அனைத்து வழிகளிலும் ஒத்துழைக்கும்” என்று தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்