நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை - முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ்

நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. கிரிமினல்கள் ஒரு காகிதத்தில் எழுதியதின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் கூறி உள்ளார். #CommissionerGeorge

Update: 2018-09-07 09:26 GMT
சென்னை

தமிழகத்தில் நேற்று முன்தினம் சிபிஐ திடீர் என்று ரெய்டு நடத்தியது. அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, உள்ளிட்டவர்களின் வீடுகளில் சோதனை நடந்தது.

சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், தூத்துக்குடி, பாண்டிச்சேரி. பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடந்தது. சிபிஐ அதிகாரிகள் 450 பேர் இதில் ஈடுபட்டார்கள். மொத்தம் 35 இடங்களில் சோதனை நடந்தது.

டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இன்னும் சிலர் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. இருக்கின்ற அனைத்து  உண்மைகளின் அடிப்படையில் பேசுகிறேன்.  தி.மு.க வழக்கறிஞர் தனது மனுவில் எனது பெயரை எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.

சென்னை காவல் ஆணையராக நான் இருந்த போது நான் யார் மீது குற்றம் சுமத்தவில்லை.   குட்கா ஊழலில் நான் ஆணையராக இருந்த போது குட்கா ஊழல் தொடர்பான வதந்திகள் பரப்பபட்டது.   எனவேதான் இது குறித்து அரசுக்கு கடிதம் எழுதி நடவடிக்கை எடுக்க கேட்டு கொண்டேன். குட்கா புகார் தொடர்பாக நான் யாரையும் சந்திக்கவில்லை, என்னையும் யாரும் வந்து சந்திக்கவில்லை

குட்கா புகார் கூறப்பட்ட காலத்தில் நான் பணியில் இல்லை, சிபிஐயின் எஃப்.ஐ.ஆரில் என் பெயர் இல்லை. குட்கா விவகாரத்தில் 2016 ஏப்ரல், மே, ஜூனில் சோதனை நடந்தது. நான் பதவிக்கு வந்தது செப்டம்பரில்தான் 

33 ஆண்டுகளாக காவல்துறையில் சிறப்பான சேவையாற்றி பணியை முடித்துள்ளேன். குட்கா விவகாரம் விசாரணையில் இருப்பதால் நான் சந்திக்கும் பிரச்சனையை கூற விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்