"7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது - அமைச்சர் சி.வி.சண்முகம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என அமைச்சர் சிவி சண்முகம் கூறியுள்ளார்.

Update: 2018-09-09 14:43 GMT


முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரை விடுவிக்க ஆளுநருக்குப் பரிந்துரை செய்யத் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 7 பேரையும் விடுதலை செய்வது குறித்த முடிவை தமிழக ஆளுநரே அறிவிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, அமைச்சரவையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 
அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் பேசுகையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் 7 பேரின் விடுதலை தொடர்பான அமைச்சரவையின் பரிந்துரை கடிதம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டு விட்டது. 7 பேரையும் விடுதலை செய்வதில் எந்த சிக்கலும் இருக்காது. அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று சட்டவிதி 161-ஐ பயன்படுத்தி 7 பேரையும் முன் விடுதலை செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்று கூறினார். 

மேலும் செய்திகள்