நகை, பணம் மோசடி செய்ததாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்கு

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவியை திருமணம் செய்து நகை, பணம் மோசடி செய்ததாக சப்-இன்ஸ்பெக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-09-10 21:15 GMT
ஆலந்தூர், 

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவியை திருமணம் செய்து நகை, பணம் மோசடி செய்ததாக சப்-இன்ஸ்பெக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையை அடுத்த பள்ளிக்கரணையை சேர்ந்தவர் செந்தாமரை (வயது 43). இவர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறி இருந்ததாவது:-

நான், ஈரோடு மாவட்டம் மேட்டுநாசுவான் பாளையம் ஊராட்சி மன்ற தலைவியாக இருந்து உள்ளேன். என் கணவருடன் ஒருமுறை சென்னை வந்தபோது போலீஸ்துறையில் பணிபுரியும் சந்தோஷ்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

கணவர் என் விருப்பம் இல்லாமல் தேர்தலில் போட்டியிட வைத்ததால் அவரை பிரிந்தேன். அதன் பின்னர் கடந்த 2012-ம் ஆண்டு சந்தோஷ்குமார் என்னை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் பள்ளிக்கரணை காமகோடி நகரில் வீடு எடுத்து தங்கி இருந்தோம்.

இதற்கிடையே அவருக்கு சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு கிடைத்தது. அப்போது உயர் அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று கூறி என் மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த ரூ.12 லட்சத்து 60 ஆயிரம் மற்றும் 40 பவுன் நகைகளை பெற்று கொண்டார்.

இந்த நிலையில் சந்தோஷ்குமாருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. இதுபற்றி கேட்டபோது என்னை மிரட்டி வீட்டில் இருந்த 6 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மற்றும் 3 கைக்கெடிகாரங்களை எடுத்து சென்று விட்டார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த புகார் மனு குறித்து விசாரணை நடத்த பள்ளிக்கரணை போலீசாருக்கு மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவு பிறப்பித்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது சந்தோஷ்குமார் புளியந்தோப்பு போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்