காதலி ஆற்றில் குதித்து இறந்ததால் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை

தஞ்சை அருகே காதலி ஆற்றில் குதித்து இறந்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2018-09-10 22:00 GMT
தஞ்சாவூர், 

தஞ்சை வைரம் நகரை சேர்ந்த சேகர் என்பவருடைய மகன் விக்னேஷ்(வயது20). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்துவந்தார். அதே கல்லூரியில் தஞ்சை காமாட்சி நகரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகள் ஜெயஸ்ரீயும்(22) படித்துவந்தார்.

இவர்கள் இருவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த மாதம் 31-ந்தேதி கல்லூரியில் இருந்த விக்னேஷ், தனது காதலி ஜெயஸ்ரீயின் செல்போனை வாங்கி பார்த்தார். அப்போது அந்த செல்போனில் சில எண்களில் இருந்து அழைப்பு வந்திருந்தது. உடனே விக்னேஷ், இந்த எண்கள் யாருடையது என்று கேட்டார். இதில் கோபமடைந்த ஜெயஸ்ரீ, என்னை சந்தேகப்படுகிறாயா? என்று கேட்டு விக்னேஷுடன் சண்டை போட்டார். நீண்ட நேரத்திற்கு பின்னர் இருவரும் சமாதானம் அடைந்தனர்.

இதைதொடர்ந்து விக்னேஷ், தனது காதலியுடன் மோட்டார் சைக்கிளில் நெய்வாய்க்கால் பகுதியில் உள்ள கல்லணை கால்வாய்க்கு சென்றார். அப்போது அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ஜெயஸ்ரீ கல்லணை கால்வாயில் ஓடும் தண்ணீரில் குதித்தார்.

காதலி ஆற்றில் குதித்ததால் அவரை காப்பாற்றுவதற்காக விக்னேசும் ஆற்றில் குதித்தார். இதை அங்கிருந்தவர்கள் பார்த்து இருவரையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் விக்னேஷை மட்டும் காப்பாற்றினர். ஜெயஸ்ரீயை மீட்க முடியவில்லை. தீயணைப்பு வீரர்கள் தேடிப்பார்த்தும் ஜெயஸ்ரீயை கண்டுபிடிக்க முடியவில்லை. 2 நாட்கள் கழித்து ஜெயஸ்ரீயின் உடல் துறையூர் பாலம் அருகே மீட்கப்பட்டது.

இதுகுறித்து தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

காதலி தற்கொலை செய்த நாளில் இருந்து விக்னேஷ் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். சம்பவத்தன்று விக்னேஷ் காதலி இறந்துவிட்டதால் தானும் தற்கொலை செய்ய முடிவு செய்து விஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி விக்னேஷ் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்