நன்மைக்கு எதிர்மாறாக செல்போன் பயன்பாடு மாறிவிட்டது- சத்குரு ஜகி வாசுதேவ்

நன்மைக்கு எதிர்மாறாக செல்போன் பயன்பாடு மாறிவிட்டது, அதனை நல்ல வழியில் உபயோகிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் கூறினார். #JaggiVasudev

Update: 2018-09-11 07:35 GMT
சென்னை

இந்திய இளைஞர்களிடம் தெளிவான பார்வை மற்றும் உள்நிலையில் ஒரு சமநிலையை உருவாக்கும் நோக்கத்துடன் இளைஞரும் உண்மையும் என்ற முன்னெடுப்பை ஈஷா யோகா மையம் கையில் எடுத்துள்ளது. இதுகுறித்து விளக்குவதற்காக ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நன்மைக்கு எதிர்மாறாக செல்போன் பயன்பாடு மாறிவிட்டது. இப்போது நினைத்தவுடன் யாருக்கும் நம்மால் போன் செய்ய முடிகிறது. இந்த மாதிரி வசதி கிடைக்கும் போது அதனை நல்ல வழியில் உபயோகிக்க கற்றுக் கொள்ள வேண்டும். இந்த மாதிரி சூழ்நிலைக்கு மொபைல் போனும், தொழில்நுட்பமும் காரணம் அல்ல. நம்மிடம் உள்ள விழிப்புணர்வு குறைந்ததே காரணம். ஆனால் இங்கு பலருக்கு மொபைல் போன் என்பது அவர்களின் மூளையைவிட முக்கியமானது ஆகிவிட்டது.

வாழ்க்கையை விழிப்புணர்வாக நடத்தினால்தான் மொபைல் போனையும் நமது நன்மைக்கு தேவையான மாதிரி விழிப்புணர்வுடன் பயன்படுத்த முடியும்.  கல்வி சுமையால் தற்கொலை அதிகரித்துள்ளது. மதிப்பெண்ணை நோக்கிய கல்வி முறையை மாற்றாவிட்டால் தற்கொலைகளை தடுக்க முடியாது. பள்ளிகளில் 50 சதவீத நேரம் மட்டுமே கல்வி போதிக்க வேண்டும்.

நாட்டில், கல்விச்சுமை காரணமாக இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நாடு முழுவதும் கல்வித் திட்டத்தை மேம்படுத்துவதற்கு புதிய திட்டத்தை தயார் செய்து அரசுக்கு கொடுக்க உள்ளோம். 

கோவை, சென்னை, பெங்களூரு, மைசூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை, புனே, அகமதாபாத், சில்லாங், வாரணாசி என நாட்டின் பல்வேறு பகுதிகளில் 18 பல்கலைக்கழகங்களின் மாணவர்களை சந்திக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்