விநாயகர் சதுர்த்திக்கு முட்டுக்கட்டை போடுவதாக கூறி தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணி உண்ணாவிரதம்

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு முட்டுக்கட்டை போடுவதாக கூறி தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் சென்னையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-09-11 22:38 GMT
சென்னை,

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு முட்டுக்கட்டைப்போட்டு முடக்க நினைக்கும் தமிழக அரசு மற்றும் போலீசை கண்டித்து இந்து முன்னணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று உண்ணாவிரதம் நடந்தது. உண்ணாவிரதத்துக்கு இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாநில அமைப்பாளர் க.பக்தவத்சலம், மாநில செயலாளர் த.மனோகரன், மாநகர தலைவர் ஏ.டி.இளங்கோவன் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இந்தநிலையில் காடேஸ்வரா சுப்பிரமணியம் உண்ணாவிரத மேடையில் திடீரென மயக்கம் அடைந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட சக தலைவர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். ஆனாலும் செல்ல மறுத்து மேடையில் படுத்தப்படியே அவர் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.

ராம.கோபாலன்

இந்து முன்னணியின் நிறுவன அமைப்பாளர் ராம. கோபாலன், காடேஸ்வரா சுப்பிரமணியத்துக்கு பழச்சாறு கொடுத்து மாலையில் உண்ணாவிரதத்தை நிறைவு செய்து வைத்தார்.

இதையடுத்து ராம.கோபாலன் பேசும்போது, விநாயகர் யாராலும் அசைக்க முடியாதவர். எனவே விநாயகர் சதுர்த்தி நடக்கும். ஊர்வலமும் நடக்கும். அதுக்கு எந்த விலை கொடுக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.

தமிழக பா.ஜ.க. அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன் உள்பட ஏராளமானோர் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழக அரசு போட்ட அரசாணையின் சில நிபந்தனைகளில் தளர்வு செய்யப்பட்டதால் உண்ணாவிரதம் முடித்துக்கொள்ளப்பட்டதாக இந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கண்டனம்

முன்னதாக காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறுகையில், அரசாணை என்பது அனைத்து தரப்பினருக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும். ஆனால் இந்து மதத்தின் விழாவை மட்டும் தடுக்க, முடக்க குறிவைத்து அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது கண்டிக்கத்தக்கது என்றார்.

மேலும் செய்திகள்