சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்கியது

சென்னையில், திருப்பதி திருக்குடை ஊர்வலம் நேற்று தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ‘கோவிந்தா... கோவிந்தா...’ என சரண கோஷமிட்டு திருக்குடைகளை வரவேற்றனர்.

Update: 2018-09-11 23:24 GMT
சென்னை,

திருப்பதி பிரம்மோற்சவத்தின்போது கருட சேவைக்காக இந்து தர்மார்த்த சமிதி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 11 வெண்பட்டு திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச்சென்று ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருப்பதி திருக்குடை ஊர்வலம் சென்னை பூக்கடையில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து நேற்று காலை தொடங்கியது.

இதில் விசுவ இந்து வித்யா கேந்திரா அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.கிரிஜா சேஷாத்ரி வரவேற்றார். இந்து தர்மார்த்த சமிதி நிர்வாக அறங்காவலர் வேதாந்தம்ஜி முன்னிலை வகித்தார். கன்னியாகுமரி வெள்ளிமலை ஸ்ரீவிவேகானந்தா ஆசிரமம் ஸ்ரீமத் சுவாமி சைதன்யானந்தா மகாராஜ் அருளாசி வழங்கினார்.

திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை இந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி தொடங்கிவைத்து பேசியதாவது:-

கடவுளின் கருணை தேவை

இறைவனின் கருணையால் திருப்பதி திருக்குடை விழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவானது எப்போதும் துறவியர்களின் ஆசீர்வாதத்துடன் நடத்தப்படுகிறது. விழாவில் பங்கேற்பதற்கு கூட கடவுளின் கருணை நமக்கு தேவை. கடவுளின் பார்வையின்றி நம்மால் எதையும் செய்ய முடியாது. தென்னிந்தியாவில் மிகப்பெரிய நிகழ்ச்சி திருப்பதி திருக்குடை விழா தான். இந்த விழாவில் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பங்கேற்கின்றனர்.

பாரதமானது புண்ணிய பூமி, ஞான பூமியாகும். எல்லா சமய, மதங்களுக்கும் இந்து மதம் தாய் போன்றது. தேவர்கள் காலத்தில் அசுரர்கள் இருந்தனர். தேவர்களாக இப்போது இந்துக்கள் உள்ளனர். அதை தாக்கக்கூடிய அசுரர்களாக பயங்கரவாதிகள் உள்ளனர். அவர்களை கடவுள் பார்த்து கொள்வார். இந்த திருக்குடைகளுடன் 20 லட்சம் பக்தர்களின் பிரார்த்தனைகளையும் சேர்த்து தான் சமர்ப்பிக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆன்மிகம் வாழ வேண்டும்

ஸ்ரீமத் சுவாமி சைதன்யானந்தா மகாராஜ் பேசுகையில், “எல்லா மதத்துக்கும் அடிப்படை இந்து மதம் தான். ஏனெனில் இந்து மதம் என்பது சனாதன தர்மம். இந்த சனாதன தர்மத்தை சிலர் இல்லாமல் செய்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களது நம்பிக்கை பலிக்காது. இந்துக்கள் ஒன்று சேர ஆரம்பித்துவிட்டார்கள். உலகம் வாழ வேண்டும் என்றால் பாரதம் வாழ வேண்டும்.

பாரதம் வாழ வேண்டும் என்றால் அதற்கு உயிர் நாடியான ஆன்மிகம் வாழ வேண்டும், இந்து சமயம் வாழ வேண்டும். தியாகத்துடன் நாம் தொண்டாற்ற வேண்டும். இந்த திருக்குடை நிகழ்ச்சியில் பெருமாள் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்”, என்று குறிப்பிட்டார்.

முன்னதாக திருப்பதி திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச்சென்றபோது பக்தர்கள் ‘கோவிந்தா... கோவிந்தா...’ என உற்சாக முழக்கமிட்டு வரவேற்றனர். ஆங்காங்கே பக்தர்களுக்கு குளிர்பானங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது. கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக இருந்தனர்.

அன்னதானம்

சென்ன கேசவபெருமாள் கோவிலில் தொடங்கிய திருக்குடை ஊர்வலம், என்.எஸ்.சி. போஸ் ரோடு, கோவிந்தப்ப நாயக்கன் தெரு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து மாலை 6 மணிக்கு கவுனியை தாண்டியது. வழி நெடுகிலும் ஏராளமான மக்கள் திரண்டு நின்று பூக்களை தூவி திருக்குடைகளை வரவேற்றனர். வருகிற 16-ந் தேதி திருமலையில் அதிகாரிகளிடம் திருக்குடைகளை வழங்குகின்றனர்.

திருப்பதி திருக்குடை ஊர்வலத்தையொட்டி, தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் சென்னை சென்டிரல் அருகே அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் துறைமுகம் தொகுதி செயலாளர் மற்றும் விழாக்குழு தலைவரான எம்.பிரகாஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

மேலும் செய்திகள்