ஏழைக்கு மனைவியா இருக்கலாம்... கோழைக்கு மனைவியா இருக்க முடியாது... வீடியோ வெளியிட்டு பெண் தற்கொலை
ஏழைக்கு மனைவியா இருக்கலாம் ஆனா கோழைக்கு மனைவியா இருக்க முடியாது என ஆவடியை சேர்ந்த ஆனந்தி தான் தற்கொலை செய்துகொள்ளும் முன்பு எழுதி வைத்துள்ள கடிதத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
சென்னை
சென்னை திருமுல்லைவாயில் செந்தில் நகரை சேர்ந்தவர் தேவநாத். இவரது மனைவி ஆனந்தி. இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு தான் திருமணம் நடைபெற்றுள்ளது.
கணவன் மனைவி இருவரும் தேவநாத்தின் தந்தை சம்மந்தம், தாய் சிவகாமி ஆகியோருடன் செந்தில் நகர் வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். திருமணம் ஆன நாள் முதலே கணவன் குடும்பத்தார் ஆனந்தியை டார்ச்சர் செய்து வந்துள்ளனர்.
ஆதரவாக இருக்க வேண்டிய கணவனும் அப்பா அம்மா பேச்சைக் கேட்டு மனைவியை துன்புறுத்தியுள்ளார். இதனால் திருமணம் ஆன நாள் முதல் கடுமையான மன உளைச்சல் மற்றும் விரக்தியில் இருந்து வந்துள்ளார் ஆனந்தி.
ஒரு கட்டத்தில் கணவர் மற்றும் மாமியாரின் கொடுமை வரம்பை மீறவே ஆனந்தி தற்கொலை முடிவை கையில் எடுத்துள்ளார். தற்கொலை செய்துகொள்ளும் முன்பு 8 பக்க கடிதத்தை எழுதி வைத்துள்ள அவர் வீடியோக்களையும் எடுத்து வைத்துள்ளார்.
அவரது வீடியோவிலும் தற்கொலை கடிதத்திலும் பல திடுக்கிடும் தகவல் கூறப்பட்டுள்ளன. ஆனந்தி தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
அக்கா,மாமா நீங்க என் அம்மா அப்பாவுக்கு சமமானவர்கள். அக்கா,மாமா நான் இந்த தற்கொலை முடிவு எடுக்க காரணமாக இருந்த என் மாமியார், மாமனார், என் புருஷன் இவங்க மூன்று பேரையும் சட்டத்துக்கு முன்னாடி நிறுத்தி தகுந்த தண்டனை வாங்கி கொடுங்க.
அப்ப தான் எந்த மருமகளுக்கும் இப்படி ஒரு சம்பவம் நடக்காது. அப்புறம் பீரோ லாக்கர்ல ஒரு லெட்டர் இருக்கு அதை சாட்சியா எடுத்துக்கங்க, இரண்டு வீடியோவும் இருக்கு.
என் மாமியார் கொடூர குணம் கொண்டவர், என் மாமனார் பொண்டாட்டிக்கு பயப்படும் பயந்தாகோலி, என் புருஷன் அம்மா அப்பாவுக்கு பயந்த கோழை. ஏழைக்கு மனைவியா இருக்கலாம். ஆனா இந்த கோழைக்கு மனைவியா வாழ்வதை விட சாவதே மேல்.. டாட்டா பாய் மை சுவிட் பேமலி.. இவ்வாறு ஆனந்தி தனது கடிதத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.