நீதித்துறை நெருக்கடி நிலையில் இருப்பதாக அறிவிக்க நேரிடும் தமிழக அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை அரசு கையாளும் விதத்தை பார்க்கும்போது நீதித்துறை நெருக்கடியில் இருப்பதாக அறிவிப்போம் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-01-09 12:08 GMT
சென்னை

சிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகள் தொடர்பாக சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்குகளை நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு கடந்த ஒரு வருடமாக விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன்.மாணிக்கவேல் தரப்பில் இருந்து தனக்கு அலுவலகம் இன்னும் முறையாக ஒதுக்கப்படவில்லை எனவும் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தனி அலுவலகம் இல்லாமல் நடுத் தெருவில் நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து நீதிபதிகள் அரசு தலைமை வழக்கறிஞரிடம் விளக்கம் கேட்டனர். இதற்கு ஓய்வு பெற்ற ஒருவர் காவல்துறை கீழ் உள்ள அதிகாரிகளை எப்படி இடமாற்றம் செய்ய முடியும் என நீதிபதிகளிடம் அரசு தரப்பு வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார். இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள் ஓய்வு பெற்ற ஒருவர் டிஜிபியாக தொடரும்போது சிறப்பு அதிகாரி ஏன் தொடரக்கூடாது எனக் கேள்வி எழுப்பினர்.

பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டு 50 நாட்களாகியும் இன்னமும் ஏன் அலுவலகம் ஒதுக்கப்படவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பொன்.மாணிக்கவேல் அலுவலகம் வேண்டாம் எனக் கூறியதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த பொன்.மாணிக்கவேல் தரப்பு கூடுதல் டிஜிபியின் உதவியாளர் ஒருவர் தனக்கு பிரச்சினை வரக்கூடாது என்பதற்காக சாவியை கேட்டதால் அலுவலக சாவியை ஒப்படைத்ததாக தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கங்களில் திருப்தி அடையாத நீதிபதிகள் சிலைக் கடத்தல் வழக்கு தொடரப்பட்டதில் இருந்து அரசின் செயல்பாடுகள் முறையாக இல்லை எனவும் சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை அரசு கையாளும் விதத்தை பார்க்கும்போது தமிழகத்தில் நீதித்துறை நெருக்கடி நிலையில் இருப்பதாக அறிவிக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்த வழக்கில் அரசின் நிலைப்பாடும் செயல்பாடும் என்ன என்பதை விளக்க வேண்டும் எனக் கூறி வழக்கை 21 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்