நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய கூட்டணி அமைப்போம் -தமிழிசை சவுந்தரராஜன்
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய கூட்டணி அமைப்போம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.;
சென்னை
தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட விவசாயிகளுக்கான உதவித் தொகை மூலம் தமிழகத்தில் 72 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
கொல்கத்தாவில் போலீஸ் கமிஷனரை விசாரிக்க சிபிஐ சென்றதற்காக, மம்தா பானர்ஜி கலாட்டா செய்கிறார். மம்தா பானர்ஜிக்கு தமிழகத்தில் சிலர் ஆதரவு தெரிவிக்கிறார்கள்.
அமித்ஷாவின் ஹெலிகாப்டரும், யோகி ஆதித்யநாத்தின் ஹெலிகாப்டரும் இறங்குவதற்கு மேற்குவங்க அரசு அனுமதிக்கவில்லை.
சீப்பை ஒளித்து வைத்து விட்டால் கல்யாணம் நின்றுவிடும் என மேற்குவங்கத்தில் பாரதீய ஜனதா பிரசாரத்திற்கு தடை விதிக்கிறது மேற்கு வங்க அரசு.
தமிழகத்தில் பிரமாண்ட கூட்டங்கள் நடைபெற உள்ளன. நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய கூட்டணி அமைப்போம். பிரதமர் மோடி வரும்போது எல்லாம் சிலர் கறுப்பு கொடி காட்டுகிறார்கள். யானையை எலி நிறுத்தி விடலாம் என நினைக்கிறது.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.