திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால், மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் -மு.க.ஸ்டாலின்

மத்தியில் திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால், மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2019-02-23 07:57 GMT
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளியில் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின் மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர் பேசிய அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரப்போகிறது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலுடன், காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் வர வாய்ப்புள்ளது. இடைத்தேர்தல் வைத்தே ஆக வேண்டும். கடந்த ஒரு வருடமாக 18 தொகுதிகள் காலியாக இருந்தன. தற்போது மேலும் 3 தொகுதிகளும் காலியாகி உள்ளன. எனவே இந்த 21 தொகுதிகளுக்கும் நியாயமாக இடைத்தேர்தல் வைத்தே ஆகவேண்டும். அப்படி தேர்தல் வைத்தால் ஒரே செலவுடன் முடியும். இதுகுறித்து தேர்தல் கமி‌ஷன் முடிவு செய்யும். ஆனால் வைக்கிறார்களோ, வைக்கவில்லையோ? என்று தெரியவில்லை. அது கேள்விக்குறியாகவே உள்ளது. ஏனென்றால் இடைத்தேர்தல் நடந்தால் அதில் அ.தி.மு.க தோற்றுப்போகும், ஆட்சியில் இருக்க முடியாது. எனவே, மெஜாரிட்டி இல்லாமல் மைனாரிட்டியாக உள்ள அ.தி.மு.க. அரசு கவிழ்ந்து விடும். எனவே இடைத்தேர்தல் நடைபெறுகிறதா? என்று தெரியவில்லை. மோடி இவர்கள் சொல்வதைத்தான் கேட்கிறார். இதையெல்லாம் கூறித்தான் மோடியுடன் அவர்கள் பாராளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி வைத்துள்ளனர்.

பாராளுமன்ற தேர்தல் வந்தாலும் சரி, அத்துடன் சேர்ந்து 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலும் வந்தாலும் சரி. அதில் இந்த ஓசூர் தொகுதியும் அடங்கும். எனவே, இந்த தொகுதி மக்கள் நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும் என்று உங்களை எல்லாம் பார்த்து கேட்டு கொள்வதற்காக தான் நான் உங்களை நாடி தேடி வந்துள்ளேன். எனவே, உங்களுடைய பிரச்சினைகள் என்ன? இதற்காக மனுக்களைக்கூட நீங்கள் கொண்டு வந்துஇருக்கலாம். அப்படி உங்களது பிரச்சினைகளை எழுதி கொண்டு வந்திருந்தால், கூட்டம் முடிந்து போவதற்குள் நான் அனைவரிடம் மனுக்களை பெற்று கொள்வேன்.

இங்கு பெண்கள் மட்டுமே பேச வேண்டும். ஆண்களை நான் எப்போது வேண்டுமானலும் அவர்களை தொடர்பு கொள்ள முடியும். எனவே பெண்கள் தங்களது குறைகளை ஒவ்வொருவராக கூறலாம். பெண்கள் இங்கு அமைதியாக உள்ளீர்கள். ஆனால் மற்ற இடங்களை காட்டிலும் பெண்கள் இங்கு அமைதியாக இருப்பது எனக்கு பெருமையாக உள்ளது. ஏனென்றால் பெண்கள் ஒரு இடத்தில் கூட்டமாக இருந்தாலும் அங்கும் சத்தமும், கலவரமும் நிறைந்து இருக்கும். இங்கு அமைதியாக நீங்கள் எல்லாம் அமர்ந்து இருக்கும்போது ஒரு கட்டுப்பாட்டுடன் தி.மு.க.வுக்கு தான் நாம் ஆதரவு தரவேண்டும் என்ற நம்பிக்கையுடன் நீங்கள் கூடி இங்கு வந்து இருக்கிறீர்கள். எனவே, அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக நாங்கள் உங்கள் பிரச்சினைகளை தீர்க்க காத்திருக்கிறோம். உங்களது பிரச்சினைகளை ஒவ்வொருவராக கூறுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

மத்தியில் திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால், மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

மேலும் செய்திகள்