அ.தி.மு.க. கூட்டணி கட்சியினர்- விடுதலை சிறுத்தைகள் இடையே மோதல் வீடுகளை அடித்து நொறுக்கியதால் பதற்றம்

செந்துறை அருகே அ.தி.மு.க. கூட்டணி கட்சியினருக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.;

Update:2019-04-19 03:00 IST
செந்துறை,

செந்துறை அருகே அ.தி.மு.க. கூட்டணி கட்சியினருக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

தாக்குதல்

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி கிழக்கு பகுதியில் மணிமேகலை என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் மாற்றுத் திறனாளியான ரபாண்டியன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். நேற்று மதியம் அதே பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஒருவர் வீரபாண்டியனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அ.தி.மு.க. கூட்டணி கட்சியினர் சிலர் விடுதலை சிறுத்தைகள் கட்சி சின்னமான பானை ஒன்றை சாலையில் போட்டு உடைத்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் பொன்பரப்பி கிழக்கு பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி அருகே சென்றுகொண்டு இருந்த பா.ம.க. உறுப்பினர் சுப்பிரமணியன்(வயது 47) என்பவரை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீடுகளை அடித்து நொறுக்கினர்

இதனால் ஆத்திரம் அடைந்த அ.தி.மு.க., பா.ம.க. கூட்டணி கட்சியினர் மாணவியர் விடுதி முன்பு ஒன்று கூடி விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் எதற்காக சுப்பிரமணியனை தாக்கினர் என தட்டிக்கேட்டனர். அப்போது இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கல்வீசி தாக்கிக்கொண்டனர்.

பின்னர் அருகே இருந்த காலனி தெருவிற்குள் புகுந்து அங்கிருந்த ஓட்டு வீடுகளை அடித்து நொறுக்கினர். இந்த சம்பவத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரவி, செல்வராஜ், அஜய், தேவர் ஆகிய 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஒரு மொபட்டும் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

செய்தியாளர் மீது தாக்குதல்

இந்த நிலையில் அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டு வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர். அப்போது அப்பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் ஒருவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடுமையாக தாக்கினர்.

இதில் படுகாயம் அடைந்த அவரை போலீசார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சம்பந்தப்பட்ட பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்