நாய் குறுக்கே வந்ததால் விபத்து; மகன் கண் முன்னே தாய் பலி

நாய் குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில் மகன் கண் முன்னே தாய் பலியானார்.

Update: 2023-06-21 19:21 GMT

அரியலூர் மாவட்டம் தா.பழூர் வானியன்கேணி பகுதியில் வசித்து வருபவர் கலியமூர்த்தி மனைவி தனலட்சுமி(வயது 55). இவர் தனது மகன் கலைச்செல்வனுடன் நேற்று மாலை மயிலாடுதுறையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது கோடாலி கருப்பூர் கிராமம் ஆயிபாளையம் ரேஷன் கடை அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென நாய் ஒன்று சாலையில் குறுக்கே ஓடி வந்து மோட்டார் சைக்கிளில் மோதியதாக கூறப்படுகிறது. இதில் நிலை தடுமாறிய கலைச்செல்வன் மற்றும் தனலட்சுமி ஆகியோர் சாலையில் விழுந்துள்ளனர். சம்பவத்தில் தலையில் காயம் ஏற்பட்ட தனலட்சுமி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த மகன் கலைச்செல்வன் தன் கண் முன்னாடியே தனது தாய் இறந்த அதிர்ச்சியில் மயக்க நிலையில் இருந்துள்ளார். சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் தா.பழூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவத்தில் உயிரிழந்த தனலட்சுமியின் கணவர் கலியமூர்த்திக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் தனலட்சுமி மற்றும் கலைச்செல்வன் ஆகியோரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு கலைச்செல்வனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவத்தில் உயிரிழந்த தனலட்சுமியின் உடல் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து தனலட்சுமியின் கணவர் கலியமூர்த்தி தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்