குமரி மண்ணையும் பிரதமர் மோடியையும் பிரிக்க முடியாது - அண்ணாமலை பேச்சு

அடுத்த 25 ஆண்டுகளுக்கான கனவுகளுடன் பிரதமர் மோடி வருகை தந்துள்ளார்.

Update: 2024-03-15 06:39 GMT

கன்னியாகுமரி,

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த சூழலில் பிரதமர் மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக தமிழகத்தை குறி வைத்து திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை, சென்னை போன்ற பகுதிகளில் நடந்த பொதுக்கூட்டங்களில் பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவு திரட்டிச் சென்றார்.

இதனை தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் பா.ஜனதா கட்சியின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருகை தந்தார். ஹெலிகாப்டர் மூலமாக அரசு விருந்தினர் மாளிகை வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து கார் மூலம் அகஸ்தீஸ்வரம் சென்றார்.

இந்நிலையில் இந்த கூட்டத்தில் தமிழக பாஜ.க.தலைவர் அண்ணாமலை உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, மோடி 3வது முறையாக மீண்டும் பிரதமர் ஆவார். குமரி மண்ணையும் பிரதமர் மோடியையும் பிரிக்க முடியாது. குமரியில் 1995-ல் ஏக்தா யாத்திரையை தொடங்கியபோது மோடிக்கு முக்கிய பங்கு இருந்தது.

அடுத்த 25 ஆண்டுகளுக்கான கனவுகளுடன் பிரதமர் மோடி வருகை தந்துள்ளார். 400 தொகுதிகளில் வெற்றி என்பது வெறும் வார்த்தை அல்ல, பா.ஜ.க தொண்டர்களின் உணர்வு. 1892ல் குமரிக்கு வந்த நரேந்திர தத்தா பாறை மீது அமர்ந்து விவேகானந்தராக மாறினார். தற்போது இங்கு வந்துள்ள மோடி ஞானியாக மாறியுள்ளார். 140 கோடி மக்களின் விஸ்வகுருவாக மோடி திகழ்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்