குறுவை சாகுபடி: மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

Update: 2022-05-23 07:55 GMT

மேட்டூர்,

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை, நாகை ஆகிய 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இந்த தண்ணீர் திறப்பு அணையில் இருக்கும் நீரை பொறுத்து குறித்த நாளில் அல்லது அதற்கு முன்பாகவோ, அதன் பின்பாகவோ திறந்து வைக்கப்படுகிறது. இவ்வாறு திறக்கப்படும் தண்ணீரின் மூலம் விவசாயிகள் குறுவை, சம்பா, தாளடி ஆகிய சாகுபடியில் ஈடுபடுகிறார்கள். முதலில் திறந்து விடப்படும் தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுபடுவார்கள்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக, கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பும் தருவாயில் உள்ளதால், குறுவை சாகுபடிக்காக முன்னதாகவே தண்ணீர் திறந்து விட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) மாலை 3 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையம் வருகிறார். அவருக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். பின்னர் அவர் இரவு மேட்டூரில் தங்குகிறார். நாளை (செவ்வாய்க் கிழமை) காலை 10 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைக்கிறார். முதல்-அமைச்சர் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்