ஆண்டிப்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி : சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் மறியல்; போக்குவரத்து பாதிப்பு
ஆண்டிப்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியானார். சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதி்க்கப்பட்டது.;
தொழிலாளி பலி
ஆண்டிப்பட்டி அருகே உள்ள அம்மச்சியாபுரம் வடக்கு தெருவை சேர்ந்த பால்பாண்டி மகன் அய்யணன் (வயது 18). இவர் அதே கிராமத்தை சேர்ந்த அறிவானந்தம் என்பவரது தோட்டத்தில் விவசாய கூலி வேலை செய்து வந்தார். கடந்த 1-ந் தேதி வழக்கம் போல் இவர், விவசாய தோட்டத்திற்கு வேலைக்கு சென்றார். அப்போது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றபோது அங்கு மின்சார வயர்கள் சுருண்டு கிடந்தது.
இதை சரிசெய்த போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதாக கூறப்படுகிறது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது தந்தை பால்பாண்டி க.விலக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
சாலை மறியல்
மேலும் அய்யணன் சாவில் மர்மம் இருப்பதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரது தந்தை புகார் கொடுத்திருந்தார். இந்நிலையில் அந்த புகாரின் மீது தற்போது வரை நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அய்யணனின் உறவினர்கள் குன்னூர் பகுதியில் மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ராமலிங்கம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தங்களது புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனை ஏற்றுக் கொண்ட மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த மறியல் போராட்டத்தால் தேனி-மதுரை சாலையில் இருபுறமும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.