ஓட்டப்பிடாரம் அருகே கல்லூரி மாணவர் கிணற்று தண்ணீரில் மூழ்கி சாவு

ஓட்டப்பிடாரம் அருகே நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்த கல்லூரி மாணவர் கிணற்று தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து போனார்.

Update: 2023-07-03 18:45 GMT

கல்லூரி மாணவர்

ஓட்டப்பிடாரம் அருகே அக்கநாயக்கன்பட்டி மேலத்தெருவை சேர்ந்த மகாராஜன் மகன் சர்மா (வயது 19). இவர் பசுவந்தனை அருகே உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் தனது நண்பர்களுடன் அக்கநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ராமகிருஷ்ணன் என்பவர் தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். அனைவரும் கிணற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர்.

தண்ணீரில் மூழ்கினார்

குளித்துக் கொண்டிருந்த சர்மா திடீரென்று கிணற்று தண்ணீரில் மூழ்கியுள்ளார். நீண்டநேரமாக அவர் வெளியே வராததால், நண்பர்கள் தண்ணீருக்குள் நீந்தி சென்று தேடிப் பார்த்தனர். ஆனாலும் அவரை மீட்க முடியவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், கிராமத்திற்கு ஓடிச்சென்று பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து கிராமமக்களில் சிலர் கிணற்றுக்குள் இறங்கி தேடினர். அப்போது கிணற்றுக்கு அடியில் சுயநினைவு இல்லாமல் மயங்கி கிடந்த சர்மாவை அவர்கள் மீட்டு மேலே கொண்டு வந்தனர். உடனடியாக அவரை சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாவு

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சர்மா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவரது உடலை பார்த்து குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுதனர். மேலும் நண்பர்கள் முன்னிலையில் கல்லூரி மாணவர் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்