இந்தோனேசியாவின் சம்பா தீவில் அடுத்தடுத்து கடுமையான நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சம்பா தீவில் இன்று காலை அடுத்தடுத்து கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.;

Update:2018-10-02 06:37 IST

ஜகர்த்தா,

இந்தோனேசியாவின் சம்பா தீவில் தெற்கு கடலோர பகுதியில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டரில் 5.9 ஆக பதிவாகி உள்ளது.

இந்த தீவில் 7 லட்சத்து 50 ஆயிரம் வரை வசித்து வருகின்றனர்.  இந்நிலநடுக்கம் சம்பா தீவுக்கு 40 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது.

அதன்பின் 15 நிமிடங்கள் கழித்து கடுமையான 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இதே பகுதியில் 30 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.

இந்நிலநடுக்கத்தினால் உடனடியாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.  உயிரிழப்பு அல்லது காயம் அடைந்தவர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த தீவு சுலாவெசி தீவுக்கு தெற்கே 1,600 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.  கடந்த வெள்ளி கிழமை சுலாவெசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் 800க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

மேலும் செய்திகள்