கிம் ஜாங் அன் - தென்கொரிய அதிபர் 3-வது முறையாக சந்திக்க திட்டம்
வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் மற்றும் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் ஆகியோர் 3-வது முறையாக சந்திக்க உள்ளனர்.
பியாங்யாங்,
கொரியப்போர் 1953-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த பின்னர் வட, தென்கொரியாக்கள் இடையே இணக்கமான சூழல் கிடையாது. கொரியப்போர் முடிவுக்கு வந்தபோதும், இரு நாடுகள் இடையே பனிப்போர் பல்லாண்டு காலமாக நீடித்து வந்தது. இந்நிலையில் சமீபத்தில் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், சில அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தியது. அணு ஆயுத சோதனைகள் மூலம் மிரட்டி வந்த வடகொரியா இறங்கி வந்து தென் கொரியாவுடன் பேச்சு வார்த்தைக்கு முன் வந்தது. அதன் பின் இருநாடுகளின் உயர்மட்ட குழுவினர் சந்தித்து பேசினர். இதனால் இரு நாடுகளுக்கிடையேயான பகை விலகத் துவங்கியது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் - தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் ஆகியோரின் முதல் சந்திப்பு இரு நாடுகளின் எல்லையையொட்டி தென்கொரிய பகுதியில் உள்ள பன்முஞ்சோமில் நடைபெற்றது. அப்போது,இரு நாடுகளுக்கு இடையே போடப்பட்ட ஒப்பந்தமான - கொரிய தீபகற்பத்தின் சமாதானம், செழிப்பு மற்றும் ஒருங்கிணைப்புக்கான புதிய பன்முன்ஜொம் பிரகடனம், ஆகியவை போடப்பட்டது. இதைத்தொடர்ந்து இரு தலைவர்களும் 2-வது முறையாக மே 26 ஆம் தேதி சந்தித்துக்கொண்டனர்.
இந்த நிலையில், 3-வது முறையாக இரு தலைவர்களின் சந்திப்பு வரும் செப்டம்பர் 18 முதல் செப்டம்பர் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தென்கொரிய அதிபர் மூனின் சிறப்பு தூதர் சங் யூ யாங், நேற்று பியாங்யாங் சென்றார். இவரது வடகொரிய பயணத்துக்கு பிறகு தென்கொரிய அதிபர் வடகொரியா செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரிய உச்சி மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தம் செயல்பாடு பற்றி ஆய்வு ஆலோசனை கொரிய தலைவர்களின் உச்சி மாநாட்டில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.