திருடப்பட்ட 2 சிலைகள் அருங்காட்சியகங்களில் மீட்பு, இந்தியாவிடம் ஒப்படைத்தது அமெரிக்கா

இந்தியாவில் திருடப்பட்ட 2 சிலைகளை அருங்காட்சியகங்களில் இருந்து மீட்டு அமெரிக்கா இந்தியாவிடம் ஒப்படைத்தது.

Update: 2018-09-06 10:20 GMT
வாஷிங்டன்,

தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சாமி சிலைகள் திருடப்பட்டு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்தப்படுகின்றன. தமிழகத்தில் சிலை திருட்டு தொடர்பான வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிலைகளும் மீட்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலிருந்து திருடப்பட்டு வெளிநாடுகளில் உள்ள சிலைகளை மீட்டு நாட்டிற்கு திரும்ப கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இந்நிலையில் இந்தியாவில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்ட இரு சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. சிலைகள் 500,000 டாலர்கள் மதிப்பிலானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து திருடப்பட்ட சோழர் காலத்தை சேர்ந்த லிங்கோத்பவ மூர்த்தி சிலை (12-ம் நூற்றாண்டை சேர்ந்தது) அலபாமாவில் உள்ள பிர்மிங்காம் மியூசியத்தில் இருந்தது. அந்த சிலை திருடப்பட்டவை என்பதற்கான ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டதை அடுத்து, உரிமையாளரிடம் இருந்து அமெரிக்கா சிலைகளை பெற்றுள்ளது. இதேபோன்று பீகாரில் இருந்து திருடப்பட்ட  பாலமன்னர்கள் காலத்தை சேர்ந்த மஞ்சுஸ்ரீ சிலையும் மற்றொரு மியூசியத்திலிருந்து மீட்கப்பட்டது. இரண்டு சிலைகளும் இந்தியாவில் இருந்து திருடப்பட்டது என்பது தொடர்பான ஆதாரங்களை இந்திய அரசு சமர்பித்தது, இதனையடுத்து அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.

12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 2 சிலைகளும் இந்திய தூதர் சந்தீப் சக்கரவர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டது. விரைவில் இந்த சிலைகள் இந்தியா கொண்டுவரப்பட உள்ளன. கடந்த 2016-ம் ஆண்டு சுமார் 2000 ஆண்டுகள் பழமையான சாமி சிலைகள் உட்பட 200-க்கும் மேற்பட்ட கலைப் பொருட்களை இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் அமெரிக்கா திருப்பி அளித்துள்ளது. அமெரிக்க ஏல நிறுவனத்தில் இருந்து 1000 ஆண்டுகள் பழமையான இந்திய சிலைகளும் அவ்வாண்டு மீட்கப்பட்டது. இதுபோன்று ஆஸ்திரேலியாவும் இந்தியாவிடம் சிலைகளை ஒப்படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்